ஆட்டோக்கு காசு இல்ல... சைக்கிள் ரிக்ஸாவில் மனைவியுடன் 90 கிமீ பயணித்த கணவர்! கண் கலங்க வெச்சுட்டாரு
மனைவியை அமர வைத்து கொண்டு, 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கணவர் சைக்கிள் ரிக்ஸா ஓட்டி வந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில், பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சைக்கிள், டூவீலர் போன்ற வாகனங்கள் மூலமாக, ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்தனர். அத்துடன் ஒரு சிலர் நடந்தும் கூட பயணம் செய்வதை பார்க்க முடிந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து ஓரளவிற்கு சீராகி விட்டது. ஆனால் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழலில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை, கணவர் ஒருவர் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ரிக்ஸாவில் அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னணி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள சாஹிகோபால் பகுதியை சேர்ந்தவர் கபீர் பூயின். இவரது மனைவி சுகந்தி. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுகந்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே சென்றது.

இதன் காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி (SCB) மருத்துவமனைக்கு சுகந்தியை அழைத்து செல்லும்படி, அவரது கணவர் கபீர் பூயினிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு சுகந்தியை மாற்றுவதற்கு, கபீர் பூயினிடம் பணம் இல்லை. எனவே மனைவி சுகந்தியை அவர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

எனினும் வீட்டிற்கு வந்த பின் சுகந்தியின் உடல்நிலை இன்னும் மோசமானது. எனவே ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற வாடகைக்கு, சைக்கிள் ரிக்ஸா ஒன்றை கபீர் பூயின் வாடகைக்கு எடுத்தார். அந்த சைக்கிள் ரிக்ஸாவில் மனைவியை அழைத்து கொண்டு அவர் கட்டாக் வந்தார். கபீர் பூயினின் ஊரில் இருந்து கட்டாக் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த 90 கிலோ மீட்டர் தூரமும் அவர் கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்ஸாவை மிதித்து கொண்டு, கட்டாக் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கே சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்கள் சிலரும் இந்த தம்பதியை பார்த்தனர். அவர்களின் நிலையை கேட்டு வருத்தம் அடைந்த அவர்கள், எஸ்சிபி மருத்துவமனையில் சுகந்தியை அனுமதிப்பதற்கு உதவினர்.

இதுகுறித்து கபீர் பூயின் கூறுகையில், ''எனது மனைவியை கட்டாக் அழைத்து வருவதற்காக ஆட்டோ ரிக்ஸா ஒன்றை வாடகைக்கு எடுக்க முயன்றேன். கட்டாக் வர அவர்கள் 1,200 ரூபாய் கேட்டனர். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால், சைக்கிள் ரிக்ஸாவை வாடகைக்கு எடுத்து, எனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளேன்.
சுகந்திக்கு உடல் நிலை சரியில்லாததால், கடந்த ஒரு வருடமாக நான் கஷ்டப்பட்டு கொண்டுள்ளேன். இந்த முறை பயணம் வலி மிகுந்ததாகவும், சோர்வாகவும் இருந்தது. ஆனால் எஸ்சிபி மருத்துவமனையில் எனது மனைவிக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என நம்புகிறேன்'' என்றார். மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து ஒடிசா டிவி செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








