சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.42,500 அபராதம்... ஆர்டிஓ அதிகாரி அதிரடி!
ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் இல்லாமல் மகனை பைக் ஓட்டுவதற்கு அனுமதித்த தந்தைக்கு நீங்கள் நினைத்து பார்த்திராத பெரும் தொகையை அபராதமாக விதித்து ஆர்டிஓ அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஆயிரங்களில் துவங்கி லட்சக்கணக்கான ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மேலும், சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோராருக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை வரை அளிக்கப்படுகிறது. இந்த கடுமையான நடவடிக்கைகளால் போக்குவரத்து விதிமீறல்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், ஓடிசாவில் சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக கணிசமான அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிசாவிலுள்ள பத்ரக் மாவட்டத்தில் ரானிகரியா என்ற இடத்தில் ஒரே பைக்கில் மூன்று சிறுவர்கள் ஒருவழி பாதையில் தவறான திசையில் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளனர். இதையடுத்து, அந்த பைக்கை மடக்கிப் பிடித்து ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், பைக்கை ஓட்டி வந்தது ஆகாஷ் பஹேரா என்பதும், அவருடன் அவரது இரண்டு நண்பர்களும் உடன் வந்ததும் தெரிய வந்தது. மேலும், அங்குள்ள கல்லூரியில் அவர்கள் படித்து வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்பதும் தெரிந்தது.

ஆகாஷ் பஹேராவுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதுடன், ஹெல்மெட் அணியாமலும் வந்துள்ளார். மேலும், பிற வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், இரண்டு நண்பர்களை பின்புறம் அமர வைத்துக் கொண்டு ஒரு வழிப்பாதையில் தவறான திசையில் பைக்கை ஓட்டி வந்துள்ளார்.

இதையடுத்து, ஆகாஷ் பெஹெரா மற்றும் அவரை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை நாராயண் பெஹெரா இருவருக்கும் பத்ரக் ஆர்டிஓ அதிகாரி பெரும் அபராதத்தை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பைக்கில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வந்ததற்கு ரூ.1,000, ஓட்டுனர் உரிமம் ரூ.5,000, ஆவணங்கள் இல்லாமல் ஓட்ட அனுமதித்ததற்கு ரூ.5,000, போக்குவரத்து விதியை மீறியதற்காக ரூ.5,000, பைக்கில் ட்ரிப்பிள்ஸ் அடித்ததற்காக ரூ.1,000 மற்றும் சிறுவர் போக்குவரத்து குற்ற விதிகளின்படி ரூ.25,000 என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதியை மீறிய ஆகாஷ் பெஹெராவுக்கும், 18 வயது பூர்த்தி அடையாத தனது மகனை பைக் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காகவும், இருவருக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் 18 வயது பூர்த்தி அடையாத மகனை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு பாடமாக அமையும்.

இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களால் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்க இதுபோன்ற கணிசமான அபராதங்கள் மற்றும் சிறை தண்டனைகள் என்பது அவசியமாகி இருப்பதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








