“என்னை காப்பாற்றியது டாடா கார் தான்”... விபத்திற்கு பின் மீண்டும் டாடா காரை வாங்கிய ஒடிசா நபர்!!
டாடா டியாகோ காரில் பெரிய விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் மீண்டும் டாடா நெக்ஸான் காரை வாங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். யார் அந்த நபர்? எவ்வாறு அவரது டியாகோ கார் விபத்தில் சிக்கியது? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
பொதுவாகவே, டாடா கார்கள் பாதுகாப்புமிக்கவை என்ற கருத்து பரவலாக உள்ளது. இதற்கு காரணம், க்ளோபல் என்சிஏபி சோதனையில் டாடா கார்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் ஆகும். நிஜ உலகிலும் டாடா கார்கள் பல்வேறு உயிரிழப்புகளை தடுத்துள்ளன. இதற்கு உதாரணங்களாக பல்வேறு சம்பவங்களை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

ஆனால் என்னதான் டாடா காராக இருந்தாலும், விபத்தை ஒருமுறை நேரில் சந்தித்துவிட்டோம் என்றால் அடுத்த முறை காரை தொடவே யோசிப்போம். பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்பிழைத்தோம் என்றால், கார்கள் இருக்கும் பக்கமே சில மாதங்களுக்கு செல்ல மாட்டோம். ஆனால் இங்கு ஒருவர் டாடா டியாகோ காரில் விபத்தில் சிக்கிய பின்னரும், மறுபடியும் காசு செலவழித்து புதியதாக டாடா நெக்ஸான் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இத்தனைக்கும் இந்த நபரின் டியாகோ கார் விபத்தின்போது பலமுறை தலைக்கீழாக பல்டி அடித்துள்ளது. இருப்பினும் டியாகோ காரின் வலிமையான பாடி கட்டமைப்பினால் உயிர் பிழைத்துள்ளதாக ஆச்சரியப்படும் அந்த நபர், மீண்டும் டாடா பிராண்டிலேயே நெக்ஸான் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை தைரியமாக வாங்கியுள்ளார். ஒடிசாவில் இந்த நபரின் டியாகோ கார் விபத்து நடந்துள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த டியாகோ கார் ஓட்டுனர் வளைவில் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி திரும்பியுள்ளார். ஆனால் அந்த வளைவில் இருந்து ஸ்கூட்டர் ஒன்று வந்துள்ளது. ஸ்கூட்டர் ஓட்டி மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஸ்டேரிங்கை வேறுப்பக்கம் வேகமாக திருப்ப, ஓட்டுனரால் காரை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. இதன் விளைவாக, கார் பலமுறை பல்டி அடித்துள்ளது.
அதாவது, சக்கரங்கள் மேலே இருக்க, காரின் மேற்கூரை தரையில் பட்டுள்ளது. இதன் காரணமாகவே விபத்திற்குள்ளான டியாகோ காரின் மேற்கூரையில் கூட சேதங்கள் ஏற்பட்டுள்ளதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். ஆனால் அதிகம் சேதமடைந்து இருப்பது என்னவோ காரின் இடது முன்பக்கமே. விபத்து நடந்த போது காரின் முன்பக்கத்தின் இடது பகுதி முதலாவதாக தரையில் மோதி இருக்க வேண்டும்.

இதன் விளைவாக, காரின் பின்பக்கம் மேல்நோக்கி தூக்கியதில் கார் பல்டி அடித்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனருக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம். இவ்வாறான விபத்துகளில் காரின் கதவுகள் முக்கியமான பங்கு வகிக்கும். அதாவது, கதவுகள் மடங்காமல் இருந்தால் மட்டுமே பயணிகள் பெரிய காயம் இல்லாமல் வெளிவர முடியும். இந்த விஷயத்தில் டியாகோவின் கதவுகள் தரமான நிலையில் இருந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டாடா கார்களின் தரத்துக்கு மற்றொரு உதாரணமாக இந்த டியாகோ கார் விபத்தை பார்க்கின்றோம். அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தை அறிந்தவர்கள் மத்தியில் டாடா கார்களின் பிரபலம் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால் விபத்தில் சிக்கியவர் பயமின்றி மீண்டும் புதியதொரு காரை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதில், டாடா காரின் பக்கமே மீண்டும் வந்திருப்பது அந்த நபரின் டாடா பிராண்ட் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









