மறுபடியும் அதிர்ச்சி! ரயில் டிரைவர் செய்த காரியத்தால் தப்பிய பயணிகள்! அதை மட்டும் அவர் செய்யாம போயிருந்தா காலி
ஒடிசா (Odisha) மாநிலம் பாலசோர் (Balasore) பகுதியில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரயில் விபத்து (Train Accident) இந்தியா மட்டுமல்லாது, உலகையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த கோர விபத்தில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கானோருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீண்டு வருவதற்குள், தொடர்ச்சியாக மேலும் ஒரு சில ரயில் விபத்துக்கள் அரங்கேறியுள்ளன. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழலில், விழிப்புணர்வுடன் இருந்த ரயில் டிரைவர் ஒருவரால், ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நடைபெறவிருந்த ஒரு கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ (Bokaro) அருகே உள்ள ஒரு ரயில்வே க்ராஸிங்கை (Railway Crossing), புது டெல்லி மற்றும் புவனேஷ்வர் (ஒடிசா மாநிலம்) இடையே இயக்கப்பட்டு வரும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (Rajdhani Express) ரயில் சமீபத்தில் கடக்கவிருந்தது. இந்தியாவில் வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு பழக்கம் இருக்கிறது.
ரயில்வே க்ராஸிங்கில் கேட் மூடப்படும் சமயத்தில், வாகனங்கள் அனைத்தும் அவசர அவசரமாக வரும். ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கும் பொறுமை இல்லாமல், வாகன ஓட்டிகள் பலர் இப்படி முண்டியடித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வகையில், பொக்காரோ ரயில்வே க்ராஸிங் மூடப்படும் சமயத்தில் டிராக்டர் ஒன்று புகுந்துள்ளது.

அப்போது தண்டவாளம் மற்றும் கேட் ஆகியவற்றுக்கு இடையே டிராக்டர் சிக்கி கொண்டது. அந்த சமயத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும் அங்கு வந்து விட்டது. ஆனால் டிராக்டர் சிக்கி கொண்டிருப்பதை, அதிர்ஷ்டவசமாக ரயிலின் டிரைவர் பார்த்து விட்டார். எனவே உடனடியாக அவசரகால பிரேக்கை பிடித்து, அவர் ரயிலை நிறுத்தி விட்டார்.
சரியான நேரத்தில் ரயில் நின்று விட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் காரணமாக ரயிலின் பயணத்தின் சுமார் 41 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமான டிராக்டர் தற்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டிராக்டர் டிரைவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிராக்டர் சிக்கி கொண்டவுடன், அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை அதிகாரிகள் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தில், கேட்மேன் மீதும் தவறு இருப்பதாக தெரிகிறது. எனவே அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது ரயில்கள் மோதியிருக்கின்றன. வாகன ஓட்டிகளின் சிறு அலட்சியம், பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். எனவே வாகன ஓட்டிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








