அரசு உத்தரவை மதிக்காத ஓலா, உபேர்... பின்னணியில் நடக்கும் உண்மை என்ன?
கர்நாடக மாநிலத்தில் அரசு உத்தரவிட்ட பிறகும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்டோ சேவையை வழங்கி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

இந்தியாவில் ஆட்டோ, கார் போக்குவரத்திற்கு இன்று பலர் ஆப் மூலம் இயங்கும் சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் முக்கியமான நகரங்களில் எங்குச் சென்றாலும் அங்கு இந்த ஆப் மூலம் கார்களை நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு புக் செய்ய முடியும் என்பதால் இந்த சேவையையே மக்கள் அதிகம் விருப்புகின்றனர். இதில் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஓலா மற்றும் உபேர். இந்த இரு நிறுவனங்கள் தான் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு சமீபத்தில் இப்படியாக ஆப் மூலம் ஆட்டோ சேவைகளை நடத்தி வரும் ஓலா, உபேர் மற்றும் ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் அந்நிறுவனங்கள் எல்லாம் அம்மாநில அரசின் விதிமுறைகளை மீறி அம்மாநில அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதற்கு விளக்கம் கேட்டும் உடனடியாக ஆட்டோ சேவைகளை நிறுத்தும்படியும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் அளவில் வைரலானது. பொதுவாக வாடகை ஆட்டோகளுக்கு அரசு சார்பில் ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அந்த கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயங்க வேண்டும். ஆனால் ஆப் மூலம் தற்போது ஆட்டோக்கள் இயக்கப்படும் போது அங்கு இந்த கட்டணம் முற்றிலும் இல்லாமல் அவர்களே அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசு விடுத்த நோட்டீஸில் இதற்காக 3 நாளில் விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனால் ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்களில் ஆட்டோ சேவை முழுமையாக நிறுத்தப்படும் அல்லது விலை வெகுவாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை குறைத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு காசு, கம்பெனியின் கமிஷன் எல்லாம் சேர்த்துக் கட்டுப்படி ஆகாது என்பதால் என்ன நடக்கப்போகிறது எனப் பலர் இந்த விவகாரம் குறித்து எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அரசு விடுத்த நோட்டீஸ்க்கு பிறகும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாகப் பெங்களூருவில் ஓலா,உபேர் போன்ற ஆப்களில் இன்றும் ஆட்டோ சேவைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெரிய அளவில் விலை மாற்றமும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசு உத்தரவையும் மீறி இந்நிறுவனங்கள் தொடர்ந்து இந்த சேவையை வழங்கி வருகின்றனர்.

அரசு உத்தரவிட்டது போல அதிகவிலைக்கு ஆட்டோ சேவைகளை வழங்கி வருவது குறித்து இது வரை எந்த ஒரு தெளிவான விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேபோல இந்த விவகாரம் குறித்து கோர்ட்டிலும் எந்த ஒரு மனுவையும் இந்நிறுவனம் போடவில்லை. இதனால் இந்த விவகாரம் சற்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சில ஆர்டிஓக்களில் இப்படியாக அதிக கட்டணம் வசூலித்து ஆப் மூலம் ஆட்டோ சேவையை நடத்தி வந்த சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது கர்நாடக மாநிலத்தில் அரசு உத்தரவையும் மீறி ஆட்டோ சேவைகளை ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் நடத்தி வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த தடைக்குப் பின்னணியில், கர்நாடக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வரும் நவம்பர் 1ம் தேதி நம்ம யாத்ரீ என்ற பெயரில் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அதற்காகவே அரசு இந்த நிறுவனங்கள் மீது தற்போது திடீரென நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








