ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன வசதி வேண்டுமென கேட்டதற்கு இப்படியா!! ஓலா சிஇஓ-வை வெச்சு செஞ்ச நெட்டிசன்கள்
விற்பனையில் இருக்கும் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக வேறென்ன அம்சங்கள் வேண்டும் என டுவிட்டரில் கேட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வை நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பெரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக உருவெடுத்துவரும் ஓலா எலக்ட்ரிக் 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எஸ்1 மற்றும் எஸ்1 பிரோ என்ற பெயர்களில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் டிசம்பர் மாத மத்தியில் இருந்தே துவங்கின.

அதன்பின் கடந்த கோடை காலத்தில் டெலிவிரி செய்யப்பட்ட சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெயில் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தீப்பிடிப்பிற்கு உள்ளானதை பற்றி பார்த்திருந்தோம். இவ்வாறான அசாம்பாவிதங்கள் ஏற்பட்டாலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவதில் ஈடுப்பாட்டு உடன் இருக்கிறது.

இந்த வகையில் சமீபத்தில், எஸ்1 பிரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுவந்த இணைப்பு வசதிகளை விலை குறைவான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேறென்ன ஆக்ஸஸரீகள் வேண்டுமென டுவிட்டரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு தான் நெட்டிசன்கள் தங்களது கிண்டலான பதில்களை கூறி அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர். பெரும்பாலான நெட்டிசன்களின் கிண்டலான பதில், "தீயணைப்பான்" ஆக உள்ளது. நெட்டிசன்களிடம் இருந்து பாவிஷ் அகர்வால் நிச்சயமாக இப்படியொரு பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தீயணைப்பான் மட்டுமின்றி, சில நெட்டிசன்களிடம் இருந்து "100 சதவீத இலவச கூப்பன்", "கூடுதல் பேட்டரி பரிசாக கொடுத்தால் நன்றாக இருக்கும்" மற்றும் "என்ஜின்/பேட்டரி தீப்பிடிக்க கூடாது" போன்ற பதில்களும் சிஇஓ பாவிஷ் அகர்வாலின் பதிவிற்கு வந்துள்ளன. அதேநேரம் பாவிஷ் அகர்வாலை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் சிலர், ஏற்கக்கூடிய பதில்களையும் அளித்துள்ளனர்.

தனிப்பயனாக்கப்பட்ட ஹெல்மெட்கள், மகளிர் ஃபுட் ரெஸ்ட்ஸ், செண்டர் ஸ்டாண்ட், சில பாதுகாப்பான்கள் மற்றும் சிறிய அளவிலான க்ராப் ஹேண்டில் என்பவை அத்தகைய இணையவாசிகள் கூறியுள்ள ஏற்கக்கூடிய பதில்களாகும். இவ்வாறு ஓலா எலக்ட்ரிக்கின் சிஇஓ பாவிஷ் அகர்வாலின் இந்த டுவிட் ஆனது நெட்டிசன்கள் பலரது கருத்துகளால் பலருக்கு பரவி வருகிறது.

இதில் சிலரின் கருத்துகளுக்கு பாவிஷ் அகர்வாலும் பதிலளித்துள்ளார். "தீயணைப்பான்" என்கிற நெட்டிசன்களின் கிண்டலான பதிலுக்கு காரணம் என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும். ஓலாவின் அடையாளமாக மாறியுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவங்களே ஆகும். கடந்த கோடை காலத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, வேறு சில பிராண்ட்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தீப்பிடித்து இருந்தன.

இதில் இருந்து இன்னும் நாம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்நுட்பத்தில் முழுமையான மேம்பாட்டை அடையவில்லை என்பது தெரிய வருகிறது. இருப்பினும், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பதை பற்றியும், அவற்றை தவிர்க்கும் வழியை கண்டறிவதிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது என்பதும் உண்மையே.

இவ்வாறு இணையவாசிகளிடம் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் கருத்து கேட்பது ஒன்றும் இது புதியது அல்ல. பாவிஷ் அகர்வால் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர். குறிப்பாக, டுவிட்டரில் அவ்வப்போது தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தக்கூடியவர். ஆதலால், ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 பிரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களை சென்றடைந்திருப்பதற்கு பாவிஷ் அகர்வாலின் பங்கும் முக்கியமானதாகும்.

இதற்கிடையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்திற்கு உள்ளான விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஓலா எலக்ட்ரிக் காரின் புதிய டீசர் படங்கள் சமீப வாரங்களாக தொடர்ந்து வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் முதல் ஓலா எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகத்திற்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








