நீர்மூழ்கி கப்பலுக்கு டஃப் கொடுக்கும் ஓலா ஸ்கூட்டர் - கிண்டல் செய்தவர்கள் எல்லாம் வாயை பிளக்குறாங்க!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் டாப்-5 நிறுவனங்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் குறுகிய காலத்தில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஆனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு, அதனை சுற்றிலும் சர்ச்சைகளும் உள்ளன. சமீப காலமாக அந்த சர்ச்சைகள் வெகுவாக குறைந்துவிட்டன என்றாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் அதாவது 2021ஆம் ஆண்டில் முதல்முறையாக ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் சில குற்றச்சாட்டுகள் ஓலா ஸ்கூட்டர்கள் மீது விழுந்தன.
இதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது, அதிக வெப்பத்தினால் தீப்பிடிப்பது, ஓடிக் கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டர் பாதியாக உடைவது போன்ற அசம்பாவிதங்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏற்பட்டன. இது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், இந்த நிகழ்வுகள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குறைத்தன.

ஆனால், அதன்பின் இந்த குற்றச்சாட்டுகளை களையெடுக்கும் பொருட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்த முயற்சிகளின் மூலமாக, சமீப காலங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக தரமானவைகளாக மாறியுள்ளன. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரத்தை வெளிக்காட்டும் விதமாக தற்போது ஒரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
வட இந்தியாவில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். தலைநகர் டெல்லி மழைநீரில் தத்தளிப்பதாக நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்திருந்தோம். அந்த வகையில், குஜராத் மாநிலத்திலும் நிறைய பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளன. அதில் ஒரு பகுதியான வதோதாராவில் சாலையில் இடுப்பளவுக்கு தேங்கி கிடந்த மழைநீரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று அசால்ட்டாக சென்றுள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தற்போது வரையில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஓட்டி செல்லும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உடல்பகுதி முழுவதுமாக மூழ்கியிருக்க, ஹேண்டில்பார் மற்றும் ஹெட்லைட் மட்டுமே வெளியே தெரிவதை காணலாம்.
எலக்ட்ரானிக் பொருட்கள் நீரில் எளிதாக பழுதடைந்துவிடும் என்கிற கருத்து பரவலாக மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், ஓலாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதனை பொய் என உணர்த்தியுள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர் கூட இவ்வளவு ஆழமுள்ள மழைநீரில் இவ்வளவு எளிதாக சென்றிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இருக்கும் எக்ஸாஸ்ட் குழாயினுள் நீர் புகுந்தால் என்ஜின் ஜாம் ஆகி ஸ்கூட்டர் இயங்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் புகை வெளிவருவதற்கு எக்ஸாஸ்ட் குழாய் எதுவும் கிடையாது என்பதால், அந்த பிரச்சனை இல்லை. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களை இவ்வாறு கொண்டு செல்வதால், வேறு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் என்ஜின் கிடையாது, அதற்கு பதிலாக பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி பேக்குகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, நீர்புகாதவை என்று வழங்கப்பட்டாலும், இடுப்பளவுக்கு தேங்கிய நீரின் அடர்த்தியால் நீர் உள்ளே புகுவதற்கு வாய்ப்புள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் மற்ற எலக்ட்ரிக் பாகங்கள் சேதமடைவதற்கும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, வாகனம் தீப்பிடிக்கவும் கூடும். ஆனால், பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இயங்காமல் போகலாமே தவிர்த்து, தீப்பிடிப்பதற்கு வாய்ப்பில்லை. எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமான மழைநீரால் சேதமடைந்தால், அதுகுறித்து வாரண்டியை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக மொத்தத்தில், பெட்ரோல் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி இடுப்பளவு மழைநீரில் செல்லும்போது பழுதடைய கூடும். ஆனால், குஜாரத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பாக இயங்குகிறதே? என நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு ஓலா எலக்ட்ரிக்கின் தரமான உற்பத்தி நுட்பம் காரணமாக இருக்கலாம். உண்மையில், நீரில் இருந்து வெளியே வந்த பின்னரே இந்த ஸ்கூட்டரில் என்னென்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications








