ஓலா ஸ்கூட்டரை ஏன் நிறைய பேர் வாங்குறாங்க என்று இதை பார்த்தாலே தெரியும்... மிரண்டு போன ஓனர்!!
மழைக்காலம் துவங்கிவிட்டாலே வாகனங்கள் பழுதாகுவதை பரவலாக எல்லா இடங்களிலும் காண முடியும். அதுவும், 2-வீலர்கள் இன்னும் அதிகமாக பழுதடைகின்றன. இதன் காரணமாகவே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த மக்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நீரிலும் சிறப்பாக செயல்படுகின்றன. இதனை வெளிக்காட்டும் வகையில், சில வாரங்களுக்கு முன் குஜராத்தில் ஒருவர் தனது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடுப்பளவிற்கு தேங்கியிருந்த மழைநீரில் எளிதாக கடந்து சென்றதை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரத்தை பாராட்டும் வகையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மும்பையின் அந்தேரி பகுதியில் ஆகும். பொதுவாகவே, மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் சற்று அதிகமாக தேங்கி நிற்பது வழக்கம். அந்தேரியில் அவ்வாறு பாலம் ஒன்றின் கீழே இடுப்பளவிற்கு தேங்கி இருந்த மழைநீரில் ஒருவர் தனது ஓலா எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு சென்றுள்ளார்.

பாலத்திற்கு அடியில் செல்ல செல்ல நீரின் அளவு அதிகமாக இருந்துள்ளது. ஸ்கூட்டரின் இருக்கை வரையில் மழைநீர் தேங்கி இருந்ததை இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். நவி மும்பை பகுதியில், சன்படா - ஜூநகர் இடையேயான சுரங்கப்பாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுரங்கப்பாதைக்கு அடியில் தேங்கியிருந்த மழைநீரில் சிறுவர்கள் இருவர் ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இதன் மூலமாக, இந்த ஸ்கூட்டர் ஓட்டிக்கு நீர் எந்த அளவிற்கு தேங்கியுள்ளது என்பது குறித்த ஒரு ஐடியா கிடைத்துள்ளது. இருப்பினும், நீரில் ஸ்கூட்டரை மெதுவாகவே இந்த நபர் இறக்கியுள்ளார். மொத்தம் 2 மேம்பாலங்கள் மேலே செல்கின்றன. ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே இடைவெளி உள்ளது.

ஆதலால், இடுப்பளவிற்கு தேங்கி கிடக்கும் மழைநீரில் நீண்ட தொலைவிற்கு செல்ல வேண்டும் என்பது இந்த ஓலா ஸ்கூட்டர் ஓட்டிக்கு நன்றாகவே தெரியும். இதனாலேயே சற்று தயக்கத்துடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மழைநீருக்குள் கொண்டு சென்றுள்ளார். இந்த சிறிய தயக்கம் நீரில் இருந்து வெளியே வரும் வரையில் இவருக்கு இருந்துள்ளது. குறிப்பாக, சுரங்கப்பாதையின் மத்தியில் நீரின் அளவு சற்று அதிகமாக இருப்பதை கண்டதும் இவர் சற்று தடுமாற்றம் அடைவதை வீடியோவில் காணலாம்.
இருப்பினும், மனம் தளராமல் கடைசி வரையில் ஸ்கூட்டரை ஓட்டி சென்று வெற்றிக்கரமாக மழைநீரில் இருந்து வெளியே வந்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆழமான நீரில் நிறைய பேர் கொண்டு சென்றுள்ளனர். சமீபத்தில் குஜராத்தில் நடந்த சம்பவத்தில், தேங்கி இருந்த மழைநீரின் அளவு இன்னும் அதிகமாக இருந்தது.

மும்பையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்திலாவது பரவாயில்லை ஸ்கூட்டரின் இருக்கைகள் வரையில் வெளியே தெரிகின்றன. ஆனால், குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹெட்லைட் மற்றும் ஹேண்டில்பார் மட்டுமே வெளியே தெரிந்தன. இருப்பினும், அப்போதும் ஸ்கூட்டர் சிறப்பாக இயங்கியது. இவ்வளவு ஏன், சில மாதங்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் ஒருவர் தனது ஸ்கூட்டரை கடலில் இறங்கி, பின்னர் ஓட்டியப்படி வெளியே வந்தார்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இவ்வளவு ஆழமுள்ள நீரில் கொண்டு செல்வது நல்லதா என கேட்டால், இல்லை என்பதுதான் பதில். முடிந்தவரையில், இந்த அளவிற்கு மழைநீர் தேங்கிய சாலைகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று மட்டுமில்லை, எந்தவொரு வாகனத்தையும் கொண்டு செல்ல வேண்டாம். ஏனெனில், அதிகப்படியான மழைநீரால் ஏற்படும் சில பாதிப்புகள் உடனடியாக பிரச்சனையை தராமல், காலப்போக்கில் பழுதுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, இவ்வாறு இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கிய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு செல்வது தவறான செயல் ஆகும். அதுமட்டுமின்றி, இந்த அளவிற்கு மழைநீர் தேங்கியிருப்பது மழைநீர் வடிக்கால் அமைப்பு முறையாக இல்லாததை காட்டுகிறது. இருப்பினும், ஓலா எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீரில் இயங்கும் தன்மையை இந்த விஷயத்தில் நாம் பாராட்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









