அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா?
ஓலா நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில், கேப் நிறுவனங்கள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன. நாட்டின் முதல் நிலை நகரங்கள் மட்டுமல்லாது இரண்டாம் நிலை நகரங்களிலும் தற்போது கேப் சேவைகளை பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு கேப் நிறுவனம் ஓலா. இன்று ஓலா நிறுவனத்தை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஓலா பயணிகள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது. ஓலா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அந்நிறுவனத்தின் வயது 9.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஓலா இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது ஓலா பயணிகளுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் ஓலா சேவைகள் கிடைத்து வருகின்றன. இங்கிலாந்திலும் கூட தற்போது ஓலா சேவை வழங்கி வருகிறது.

இந்த சூழலில், ஓலா நிறுவனம் தொடர்பாக அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கில் ஓலா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஓலா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சீனியர் மேனேஜர்கள் மற்றும் நடுத்தர மட்டத்திலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதுதவிர மேலும் பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஓலா நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஓலா நிறுவனத்தில் இருந்து 1,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாக இந்த 1,000 ஊழியர்களையும் ஓலா நிறுவனம் பணியில் இருந்து நீக்கும் என்று கூறப்படுகிறது. ஓலா நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 4,500 ஊழியர்கள் வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இவர்களில் ஏறக்குறைய 20 சதவீதம் ஊழியர்களை ஓலா நிறுவனம் வேலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஓலா நிறுவன வட்டாரங்களோ, ஒட்டுமொத்த பணியாளர்களில் சுமார் 5 முதல் 7 சதவீதம் வரையிலான பணியாளர்கள் மட்டுமே, இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுவார்கள் என கூறுகின்றன.

நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கிலேயே ஓலா நிறுவனம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஓலா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதன் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








