புதிய ஆலைக்கு இடம் தேடும் ஓலா, 10 ஆயிரம் கோடி முதலீட்டைப் பெறப்போகும் மாநிலம் எது? உபிக்கு தான் அதிக வாய்ப்பு
ஓலா நிறுவனம் ரூ10 ஆயிரம் கோடி முதலீட்டுடன் புதிய ஆலை ஒன்றை நிறுவ இடம் பார்த்து வருகிறது. இது போக ஓலா காரை தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. புதிய ஆலையை பேட்டரி தயாரிக்க முக்கியமாகவும் முடிந்தால் காரை தயாரிக்கும் இடமாகவும் வைக்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

ஓலா நிறுவனம் எலெக்டரிக் கார் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கிக் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் விற்பனையைத் துவங்கியது. ஆரம்பத்திலேயே ஸ்கூட்டர் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது ஓலா நிறுவனம். மிக விரைவில் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர்1 இடத்தை நிறுவனம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த நிறுவனம் விற்பனை செய்த ஸ்கூட்டர்களின் தரம் மோசமாக இருக்கிறது. டெக்கனிக்கல் பிரச்சனைகள் வருவதாகச் சமீபத்தில் இதை வாங்கியவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் ஒன்று தீ பிடித்த சம்பவம் எல்லாம் நடந்தது. இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இந்த ஸ்கூட்டரை தயாரிக்க ஓலா நிறுவனம் மிகப்பெரிய திட்டம் ஒன்று போட்டது குறித்துக் காணலாம்

ஓலா நிறுவனம் ஆப் மூலம் டேக்ஸிகளை புக் செய்யும் நிறுவனமாகத் துவங்கப்பட்ட நிலையில் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை ஒன்றை நிறுவியது. இந்த ஆலையில் தற்போது ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆலையில் தான் ஓலா ஸ்கூட்டர்கள் தயாராகி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில 6-8 மாதங்களாக ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டது. இதற்கான ஆய்வுப் பணிகளை அந்நிறுவனம் செய்து வருவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ பர்வேஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்நிறுவனம் அந்த எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் ஆலையைக் கட்டமைக்கும் பணிகளை தற்போது முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக முதலில் ஆலையைத் தேர்வு செய்யும் பணியை அந்நிறுவனம் செய்யவுள்ளது. அந்நிறுவனம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள இருசக்கர ஆலையில் அந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது கார் தயாரிக்கும் பணியையும் அந்நிறுவனம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்காக ரூ10 ஆயிரம் கோடி முதலீட்டை அந்நிறுவனம் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள ஆலையில் அந்நிறுவனம் கார் மற்றும் டூவீலர்களுக்கான பேட்டரியை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்க உரிமம் பெற்ற சில நிறுவனங்களில் ஓலா நிறுவனமும் ஒன்று, இந்நிறுவனம் மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இந்த அனுமதியைப் பெற்றுள்ளது.

தற்போது இந்நிறுவனத்திடம் 20gWh வரையிலான பேட்டரிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓலா நிறுவனம் இதை 50 gWh ஆக உயர்த்த திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் அந்த ஆலையில் தான் பேட்டரி உற்பத்தியைப் பிரதானமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து ஓலா நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனங்களுக்கு பேட்டரிகள் விற்பனை செய்யப்படுமாம். இது போக ஏற்றுமதியும் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலையை அமைப்பதற்காக தற்போது பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உ.பி., கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் எந்த மாநிலம் இந்த வாய்ப்பை பெறும் எனதெரியவில்லை. உ.பி மாநில இந்த ஆலையை தங்கள் மாநிலத்திற்குக் கொண்டு வர அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

உ.பி மாநிலம் குறித்து நாட்டில் உள்ள இமேஜை மாற்ற அம்மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக அம்மாநில முதல்வர் எடுக்கும் முயற்சியில் இது முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் கேட்ட 1000 ஏக்கர் நிலத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் ஒதுக்கித் தருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

இதே போல தான் கடந்த 2009ம் ஆண்டு டாடா நிறுவனம் நானோ கார் ஆலையைத் துவங்கத் திட்டமிட்டபோது பல மாநிலங்கள் அதற்குப் போட்டிப்போட்டன. இறுதியாகக் குஜராத் மாநிலத்தில் டாடா நிறுவனத்தின் நானோ ஆலையை தற்போதைய இந்திய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அந்த மாநிலத்தில் வழங்கினார். அதே பாணியை தற்போது உ.பி முதல்வரும் செய்ய முயல்கிறார். ஆனால் ஓலா நிறுவனம் இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

ஓலா நிறுவனம் பேட்டரி ஏற்றுமதி அதிகம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பதால் துறை முகம் அருகில் இருப்பது போன்ற இடத்தை தேர்வு செய்யத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உ.பி மாநிலத்திலிருந்து கடல் எல்லை தூரம் என்பதால் அந்நிறுவனம் உ.பியில் தன் ஆலையை கொண்டு வரத் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

கார் தயாரிப்பைப் பொருத்தவரை அது எப்படி உருவாகிறது என்பதை பொறுத்தே அந்நிறுவனம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது. காரின் டிசைனிற்கு புதிய ஆலை தேவைப்பட்டால் அங்கேயோ அல்லது கிருஷ்ணகிரியில் உள்ள டூவீலர் தயாரிப்பு ஆலையிலேயோ கார் உற்பத்தி நடக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








