இனி இளம்பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.. ஓலா நிறுவனத்தின் 2 அதிரடி திட்டங்கள் இதுதான்..
பயணிகளின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக இளம்பெண்களின் பாதுகாப்பிற்காக 2 புதிய திட்டங்களை மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அச்சமின்றி பயணிக்கலாம்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக இளம்பெண்களின் பாதுகாப்பிற்காக 2 புதிய திட்டங்களை மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அச்சமின்றி பயணிக்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேப்களில் தனியாக பயணிக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. அத்துடன் கேப்களில் பயணிக்கும் பெண்களை, டிரைவர்கள் கடத்தி சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இதனால் கேப்களில் பயணிக்க பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், கேப்களில் பயணிக்கவே பயப்படுகின்றனர். ஒரு சிலர் வேறு வழியில்லாமல் அச்சம் கலந்த உணர்வுடன் கேப்களில் சென்று வருகின்றனர்.

எனவே இந்தியாவின் முன்னணி கேப் நிறுவனமான ஓலா, பயணிகளின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக இளம்பெண்களின் பாதுகாப்பிற்காக 2 பாதுகாப்பு திட்டங்களை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.

இதில், ஒரு திட்டத்தின்படி, தங்கள் டிரைவர்களை ஓலா நிறுவனம் எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருக்கும். செல்ல வேண்டிய பாதையில் இருந்து விலகி டிரைவர்கள் வேறு பாதையில் சென்றால், கேப்பில் பயணித்து கொண்டிருக்கும் பயணிகளை செல்போன் மூலம் உடனே ஓலா நிறுவனம் தொடர்பு கொள்ளும்.

திட்டமிடப்பட்ட பாதைக்கு பதிலாக டிரைவர் வேறு பாதையில் சென்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? என சம்பந்தப்பட்ட பயணிகளிடம், ஓலா அதிகாரிகள் கேட்பார்கள். வேறு பாதையில் செல்லும்படி டிரைவரிடம் நாங்கள் சொல்லவில்லை என பயணிகள் கூறிவிட்டால், டிரைவர் மீது கடும் நடவடிக்கை பாயும்.

சில தவறான கேப் டிரைவர்கள், திட்டமிடப்பட்ட பாதைக்கு பதிலாக வேறு பாதையில் சென்றுதான் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். இதன்மூலம் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவேதான் டிரைவர் பாதை மாறினால், அதை பயணிகளுக்கு தெரியப்படுத்த ஓலா முடிவு செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓலா நிறுவனம் அமல்படுத்த முடிவு செய்துள்ள இரண்டாவது திட்டம் 'டிரைவர் செல்பி ப்ராஜெக்ட்'. இந்த திட்டத்தின் கீழ், காருடன் சேர்த்து உங்களின் புகைப்படத்தை அனுப்புங்கள் என சம்பந்தப்பட்ட டிரைவர்களை ஓலா அதிகாரிகள் எந்த நேரத்திலும் கேட்பார்கள்.

இதன்படி ஓலா அதிகாரிகள் எந்த நேரத்தில் கேட்டாலும், காருடன் சேர்த்து தங்களை புகைப்படம் எடுத்து டிரைவர்கள் உடனடியாக அனுப்ப வேண்டும். ஒரு வேளை பதிவு செய்யப்பட்ட டிரைவர் காரில் இல்லாவிட்டால், அது தொடர்பாக உடனடியாக தீவிர விசாரணை நடத்தப்படும்.

தங்களது டிரைவர் பார்ட்னர்கள் குறித்த தகவல்களை, போலீஸ் வெரிபிகேஷனுடன் ஓலா வைத்திருக்கும். டிரைவர் செல்பி ப்ராஜெக்ட் மூலமாக, பதிவு செய்யப்பட்ட டிரைவர் மூலம்தான் கார் இயக்கப்படுகிறதா? அல்லது வேறு யாரேனும் ஓட்டி செல்கிறார்களா? என்பதையும் கூட தெரிந்து கொள்ள முடியும்.

எனவே இந்த 2 திட்டங்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என ஓலா நிறுவனம் நம்புகிறது. தற்போது இந்த 2 திட்டங்களும் பரிசோதனை முயற்சியில் உள்ளன. இவை இரண்டும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications