எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம்: என்ன கூறுகிறது ஓலா? புதிய அப்டேட்கள் கொண்டுவரப்படுமா?
கடந்த சில தினங்களுக்கு முன்பு புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவத்திற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உலகம் முழுவதிலுமே வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை நம் நாட்டில் கடந்த சில வருடங்களில் நன்கு முன்னேற்றம் கண்டு வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இதனாலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இந்த வகையில் கடந்த ஆண்டில் பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சந்தையில் களம்புகுந்தது. ஏனெனில் இதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தோற்றம் இதற்கு முன்பே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தற்சமயம் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி புனேவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலில் இதற்கான காரணம் புலப்படவில்லை, பின்னர் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரியினால் இந்த தீ உருவாகி இருக்கலாம் என கூறப்பட்டது. ஆக மொத்தத்தில் இந்த சம்பவம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருபவர்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, புதியதாக எஸ்1 ஸ்கூட்டரை வாங்க தயாராகி வந்தவர்களும் இந்த சம்பவத்தால் தயக்கமடைய துவங்கியுள்ளனர்.

இந்த தயக்கங்களை போக்கவும், இந்த பிரச்சனையை சரி செய்யும் பொருட்டும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "புனேவில் எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவத்தை நாங்கள் அறிவோம். மேலும், அதன் மூல காரணத்தை தெரிந்துக்கொள்ள விசாரித்து வருகிறோம். இதன் மூலம் கொண்டுவரப்பட உள்ள அப்டேட்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

நாங்கள் வாடிக்கையாளர்களுடன் அவர்களது பாதுகாப்பிற்காக தொடர்ந்து இணைப்பில் உள்ளோம். ஓலாவில் வாகன பாதுகாப்பிற்கு முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது. எங்களது தயாரிப்புகளில் உயர்தரத்திலான நிலைப்பாட்டை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இந்த சம்பவத்தை முக்கிய பிரச்சனையாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுக்குறித்த விபரங்களை வரும் நாட்களில் வெளியிடுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக்கின் இந்த அறிக்கையினை சுட்டிகாட்டி, இந்த நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது பங்கிற்கு, "பாதுகாப்பு மிக முதன்மையானது. இந்த சம்பவத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். விரைவில் இது சரிச்செய்யப்படும்" என தெரிவித்துள்ளார். நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சந்தித்துள்ள வாகனம்-பாதுகாப்பு தொடர்பான முதல் பிரச்சனை இதுவாகும்.

கடந்த ஆண்டில் போதிய எண்ணிக்கையில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாமல் இந்த நிறுவனம் போராடி வந்தது. இதனால்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, அப்போதே புக்கிங் துவங்கப்பட்டுவிட்டாலும், எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து டிசம்பர் மாத மத்தியில் தான் துவங்கப்பட்டன.

இதனால் கடந்த சில மாதங்களாகவே தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், எதிர்பார்த்த விற்பனை எண்ணிக்கையை பெற்றுவந்தது. ஆனால் தற்போது இதற்கு இடையூறாக புனேவில் இந்த தீப்பிடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எவ்வாறான நடவடிக்கையையும், ஸ்கூட்டரில் எத்தகைய அப்டேட்களையும் கொண்டுவர உள்ளது என்பதை பொறுத்தே நிறுவனத்தின் எதிர்கால விற்பனை அமையும்.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எஸ்1 மாடல் ரூ.1 லட்சம் என்கிற அளவிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எஸ்1 ப்ரோ மாடல் ரூ.1.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் எஸ்1 வேரியண்ட்டில் 2.98kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோ மாடலில் 3.97kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








