மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் ஓலா ஸ்கூட்டர்... இப்ப என்ன நடந்தது தெரியுமா?
ஓலா ஸ்கூட்டர்கள் சமீபத்தில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் ஸ்கூட்டர் ஒன்று ரிவர்ஸில் 50 கி.மீ வேகத்தில் சென்றதால் விபத்தில் சிக்கியதாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணலாம்

கால்டாக்ஸி துறையில் கொடி கட்டி பறந்த ஓலா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன தயாரிப்பு துறையில் களம் இறங்கப்போவதாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் ஓசூர் மாவட்டத்தில் அந்த நிறுவனம் தனக்கான வாகன தயாரிப்பு ஆலையை நிறுவியது. அங்கு தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ள் தயாராகி வருகின்றன.

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது என்ற செய்தி அறிந்தவுடனேயே மக்கள் அந்த ஸ்கூட்டரை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டினர். புக்கிங் துவங்கியதும் அந்நிறுவனம் யாரும் எதிர்பாராத அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங்கை பெற்றது. தற்போது அந்நிறுவனம் S1 மற்றும் S1Pro ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

வழக்கமாக வாகன தயாரிப்பாளர்கள் டீலர் ஷிப் முறையில் வாகனங்களை விற்பனை செய்வார்கள். ஆனால் ஓலா மாறுதலாக நேரடியாக வாடிக்கையாளர்களிடம் புக்கிங்கை பெற்று அவர்களிடம் நேரடியாகச் சென்று வாகனங்களை டெலிவரி செய்கிறது. இந்த திட்டமும் கிட்டத்தட்ட வெற்றி பெற்ற நிலையில் ஓலாவிற்கு கடந்த சில மாதங்களாக பெரும் தலைவலி வந்துள்ளது.

அதாவது ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை வாங்கியவர்கள் அந்த ஸ்கூட்டர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மருத்துவர் ஒருவர் தான் வாங்கிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நடுவழியில் பிரேக்டவுனாகி நின்றதால் அவர் ஓலா ஸ்கூட்டரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போலக் கடந்த மார்ச் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று புனோவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவங்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் ஓலா நிறுவனத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனம் சுமார் 1400 ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து அதன் பாதுகாப்பு அம்சங்களைச் சோதனை செய்தது.

இதற்கிடையில் பலர் தங்கள் ஓலா ஸ்கூட்டரில் பல்வேறு விதமான பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஓலா எலெக்டரிக் ஸ்கூட்டரில் பேட்டரியில் உள்ள சார்ஜ் திடீரென மடமடவென இறங்குகிறது என்ற பிரச்சனையைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஓலா ஸ்கூட்டரில் உள்ள டெக்னிக்கல் பிரச்சனைகள் குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஓலா ஸ்கூட்டரின் சாஃப்ட்வேரில் ஏதோ பிரச்சனை இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இதே போல டெக்னிக்கல் கோளாறு காரணமாக மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் ஓலா ஸ்கூட்டரை ஒரு முதியவர் பயன்படுத்தும் போது ஸ்கூட்டர் ரிவர்ஸில் 50 கி.மீ வேகத்தில் சென்று விபத்தைச் சந்தித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பல்லவ் மகேஷ்வர், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவர் ஓலா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இவரது 65 வயது தந்தைக்குப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். அந்த ஸ்கூட்டர் எடை குறைவு, கையாள எளிமையாக இருக்கும் என்பதால் இதைச் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி இவருக்கு ஓலா நிறுவனம் ஸ்கூட்டரை டெலிவரி செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தந்தை வீட்டின் வெளியிலிருந்த ஓலா ஸ்கூட்டரை வீட்டிற்குள் எடுத்து விட முயற்சி செய்துள்ளார். ஓலா ஸ்கூட்டரை பின்புறமாக நகர்த்த ஒரு கியர் இருக்கிறது. அதை ஆன் செய்தால் ஓலா ஸ்கூட்டர் வெறும் 5 கி.மீ வேகத்தில் பின்பக்கமாக வரும். அதைப் பயன்படுத்தி இவர் ஓலா ஸ்கூட்டரை ரிவர்ஸ் எடுத்த போது யாரும் எதிர்பாராத விதமாக ஓலா ஸ்கூட்டர் ரிவர்ஸில் 50 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. இதனால் 65 வயதான அவரது தந்தை காயமடைந்துள்ளார்.

அவரது தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பல்லவ் மகேஷ்வர் இந்த தகவலை லிங்க்டு இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் வாகனத்தின் கண்ட்ரோல் யூனிட் எனப்படும் VCU - வை ஓலா நிறுவனம் சமீபத்தில் தான் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவிற்குப் பிறகு ஓலா நிறுவனத்தின் சார்பில் இவரைத் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து ஒரு அதிகாரி கேட்டுள்ளார். ஆனால் அவர் வாகனத்தில் உள்ள பிரச்சனை குறித்து எந்த உறுதியையும் அளிக்கவில்லை என பல்லவ் கூறியுள்ளார். இப்படியாக ஓலா ஸ்கூட்டரால் ஒருவர் காயமடைவது ஒன்றும் இது முதல் முறை அல்லது

ஏற்கனவே கடந்த ஏப்15ம் தேதி ஓலா கவ்ஹாத்தியில் ஓலா ஸ்கூட்டரில் பிரேக்கிங்கில் பிரச்சனை ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் இரண்டாவது விபத்து தற்போது நடந்துள்ளது. இதற்கிடையில் ஓலா வாகனம் வைத்திருப்பவர்களின் ரைடிங் தகவல்களை ஓலா பொது வெளியில் பகிர்வதாகப் புகார்கள் உள்ளது. சமீப காலமாகத் தொடர்ந்து ஓலா நிறுவனம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








