கொரோனாவால் இக்கட்டான சூழலில் சிக்கும் டாக்சி டிரைவர்கள்... சவாரி இல்லாமல் சாலையில் நிற்கும் அவலம்!
மிகவும் இக்கட்டான சூழலில் டாக்சி டிரைவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோவிட்-19 எனும் உயிர் கொல்லி வைரஸ் கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் கடும் அச்சத்தில் உரைந்திருக்கின்றனர். மேலும், அவர்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதே நிலைதான் கொரோனா அறிகுறி காணப்படும் உலகின் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. இதன் விளைவாக மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை அந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. இதில், இந்தியா விதிவிலக்கல்ல.

வரலாறு காணாத ரூபாய் மதிப்பிழப்பைச் சந்தித்து மிகவும் இக்கட்டான சூழலில் இந்தியா சிக்கியிருக்கின்றது. இதே சூழ்நிலையைதான் உலகின் பல்வேறு நாடுகளும் சந்தித்து வருகின்றது. குறிப்பாக, கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் நாடுகளான சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகப் பெரிய சிக்கலில் சிக்கி தவித்து வருகின்றது.

உலக நாடுகள் பல இம்மாதிரியான இந்த சூழ்நிலையைச் சந்தித்து வரும்வேலையில் இந்தியாவும், இந்தியாவில் இயங்கி வரும் வணிக ரீதியிலான வாகனங்களும் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன.

இதற்கு, மக்கள் கொரோனா தாக்கத்தின் அச்சத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், சில நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை கொரோனாவில் இருந்து காக்கும் விதமாக ஒர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தை (வீட்டிலிருந்தே பணி புரிவது) வழங்கி வருகின்றது. இதனால், நாட்டின் முக்கிய நகரங்கள் பல வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறிப்பாக, மிகவும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களின் சாலைகள் முன்பெப்போதும் இல்லாத வேலை நாட்களில் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதற்கு தி-நகர் ரங்கநாதன் சாலையே முக்கிய சான்றாக இருக்கின்றது. இதனால், பொது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் பயணிகள் இல்லாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி நாடு முழுவதும், கொரோனா பரவுமோ என்ற அச்சமான சூழ்நிலைப் பரவிக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு சில வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்குவதை தவிர்க்கின்றனர். சரி குடும்பநிலையைக் கருத்தில் கொண்டு ஒரு சிலர் சவாரிக்கு சென்றாலும், மக்கள் யாரும் காரில் பயணிக்க விரும்புவதில்லை. பெரும்பாலானோர் தனிப்பட்ட வாகனங்களில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆகையால், தனியார் வாடகை வாகனங்கள் பயன்பாடில்லாமல் தேக்கமடைந்து வருகின்றது. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற்று வாங்கப்பட்டவையாக இருக்கின்றன. தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக, இம்மாத இஎம்ஐ தொகையை எப்படி செலுத்துவது என அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் அன்றாட தேவைக்கான நிதியே கேள்விக்குறியாக மாறிவிடும் என பல டிரைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆகையால், வங்கிகள் இந்த கொரோனா தாக்கத்தின் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு வரும் இரண்டு மாதங்களுக்கான இஎம்ஐ தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்யுமாறு வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, கொரோனா தாக்கத்தின் காரணமாக ஓலா மற்றும் ஊபர் ஆகியவற்றில் தங்களை இணைத்து பயன்பெற்று வந்த வாகன ஓட்டிகளே பெருமளவில் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர். முன்பிருந்ததைப் போன்று சவாரியில்லாமல் அவர்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் பணியில் ஓலா மற்றும் ஊபர் ஈடுபட்டுள்ளது. இதில், பாதுகாப்பான பயணத்தை அனுபவிப்பதற்காக சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அவர்களின் பார்ட்னர்களுக்கு டாக்சி நிறுவனங்கள் அறிவுறுத்தியிருக்கின்றன. குறிப்பாக, முகமூடி, கிருமி நாசினி போன்றவற்றைப் பாதுகாப்பிற்காக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.

தொடர்ந்து, குறிப்பிட்ட மையங்களின் மூலம் பாதுகாப்பு உபகரணங்களான முகமூடிகள், கிருமி நாசினிகள் போன்றவற்றை வழங்கி வருவதாக அது தெரிவித்துள்ளது. ஆனால், இது எந்தளவிற்கு ஓட்டுநர்களின் பொருளாதாரத்தில் பங்களிக்கும் என தெரியவில்லை. ஆகையால், அரசு இவ்விகாரத்தில் தலையிட்டு ஓட்டுநர்களின் இன்னலை தீர்க்கின்ற வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் சில வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








