பழைய கார் இனி சாலையில் கிடந்தாலே தூக்கிடுவாங்க!! டெல்லி மக்கள் ரொம்ப பாவம் - தப்பிக்க என்ன வழி?
பழைய வாகனங்களை வீட்டின் மூலையில் நிறுத்தி வைத்திருந்தாலும், அதிரடியாக பறிமுதல் செய்யப்படும் என ஓர் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. எந்த மாநிலம் அது? அப்படியென்றால் பழைய வாகனங்களை என்ன செய்வது என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
வாகனங்கள் வெளியிடும் காற்று மாசு அளவானது ஒவ்வொரு காலக்கட்ட இடைவெளியிலும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, வாகனங்களின் என்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் குழாயின் அமைப்பில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் சாத்தியமாக்குகின்றனர். இதன் மூலமாக வாகன புகையால் காற்று மாசடைவதை தவிர்ப்பதே மத்திய அரசின் நோக்கம்.

இது உலகளவில் பல்வேறு நாடுகளால், பல்வேறு பெயர்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. நமது இந்தியாவில் பிஎஸ் (Bharat Standard) என்ற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2020 ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாட்டுகள் கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தன.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் புதியதாக உருவாக்கப்படும் வாகனங்களுக்கே ஆகும். பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் வாகனத்தின் என்ஜின் & எக்ஸாஸ்ட் அமைப்பை திருத்தம் செய்ய வேண்டியது இல்லை. ஆதலால், வாகன போக்குவரத்தினால் காற்று மாசடைவதை மெதுவாகவே குறைக்க முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு அதிரடியாக ஓர் நடவடிக்கையை கொண்டுவந்தது. அதுதான், பழைய வாகன அழிப்பு கொள்கை ஆகும்.

அதாவது, குறிப்பிட்ட ஆண்டிற்கு மேல் இயங்கும் வாகனத்தை உரிமையாளர்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாகன அழிப்பு மையத்திற்கு கொண்டு சென்று அழிக்கலாம் என்பதாகும். இவ்வாறுதான் பழைய வாகனங்களை அழிக்க வேண்டும் என்று கடுமையான சட்டம் எல்லாம் கொண்டுவரப்படவில்லை. அழிக்கலாம் அல்லது வீட்டுக்கு உள்ளேயே வைத்திருக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட ஆண்டிற்கு மேல் இயங்கும் வாகனங்களை சாலையில் பார்த்தால்தான் போலீஸார் அபராதம் விதிப்பர் என கூறப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் வாகனத்திற்கு வாகனம் மாறுப்படுகின்றன. அதாவது, உதாரணத்திற்கு கார்கள் 20 வருடத்திற்கு முன் தயாரிக்கப்பட்டவை என்றால் அழிக்கப்பட வேண்டும். அதுவே, கமர்ஷியல் வாகனங்கள் 15 வருடங்களுக்கு மேல் ஓட்டக் கூடாது என்பதாகும். இதற்கு அனைத்து வாகன உரிமையாளர்களும் ஒத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி மத்திய அரசிடம் இருந்தது. இதனால்தான் பழைய வாகனங்களை வீட்டில் வைத்திருக்க அனுமதித்தது. சிலர் அத்தகைய பழைய வாகனங்களை வீட்டிற்குள் வைத்தில்லாமல், சாலையில் போட்டு வைத்திருப்பர்.
அத்தகையவர்களுக்காகவே தற்போது, டெல்லி அரசாங்கம் பழைய வாகனங்கள் சாலையில் பார்க் செய்யப்பட்டு வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என புதிய உத்தரவை அதிரடியாக வெளியிட்டுள்ளது. வாகன அழிப்பு கொள்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்தும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறும் டெல்லி மாநில அரசு, பயன்படுத்தப்படாமல்/ பயன்படுத்த முடியாமல் கிடக்கும் வாகனங்கள் சாலைகளில் பொதுமக்களின் பார்க்கிங் பகுதியை வீணாக்குவதாக தெரிவித்துள்ளது.

மேலே நீங்கள் காணும், இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை சார்பில் அனைத்து மாவட்ட மாஸிதிரேட்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் முக்கியமாக, 10 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அனைத்து டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்ரோல் வாகனங்கள் உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இயக்கத்தில் இருந்தாலோ அல்லது பார்க் செய்யப்பட்டு இருந்தலோ அவற்றை பறிமுதல் செய்து அழிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த புதிய உத்தரவால் டெல்லியில் இனி பழைய வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் சாலையில் நீண்ட மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் கூட அதிரடியாக பறிமுதல் செய்யப்படும். இந்த உத்தரவு டெல்லியில் மட்டும் தானே என மற்ற மாநிலத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில் இப்போது டெல்லியில் பிறக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு நமது சென்னையில் பிறப்பிக்கும் காலமும் நீண்ட தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









