விமானத்துல பயணிக்கும்போது இஸ்டத்துக்கு சரக்கை ஊத்தி தருவாங்களா! இல்ல அளவு எதுவும் இருக்கா??
விமான போக்குவரத்து வரலாற்றில் அரங்கேறிய மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக, ஏர் இந்தியா விமானத்தில், குடிபோதையில் பயணித்த பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பார்க்கப்படுகின்றது. தலைக்கு ஏறிய போதையினாலேயே அந்த பயணி இவ்வாறு நடந்துக் கொண்டார் என்பது விசாரணையின் வாயிலாக தெரிய வந்தது.
இதுமாதிரியான கசப்பான அனுபவங்கள் சமீப காலமாக தொடர் கதையாகி வருகின்றது. ஆகையால் விரைவில் இந்த விஷயத்தில் புதிய விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்படும் சூழல் உருவாவாகி இருக்கின்றது. ஏர் இந்தியா விமான போக்குவரத்து சம்பவம் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள் இதற்கு பின்னால் காரணமாக இருக்கின்றன.

மதுபோதையில் இருந்த விமான பயணிகள் சிலர் இதற்கு முன்னால் இதைவிட முரண்பாடான செயல்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்தவகையில், கதவை திறக்கும் செயலில்கூட சிலர் ஈடுபட்டு இருக்கின்றனர். அதுதவிர, விமானத்திற்குள்ளேயே புகைப்பிடித்தல் போன்ற செயல்களிலும் ஒரு சிலர் ஈடுபட்டு இருக்கின்றனர். இது அனைத்தும் மிகவும் மோசமான நிகழ்வுகள் ஆகும்.
ஏன், இதைவிட மோசமான செயல்களிலும் மது போதையில் இருந்த விமான பயணிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த நிலையிலேயே டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்) இதுமாதிரியான சூழல்களைக் கையாள்வதற்கு என தனி 'நிலையான இயக்க முறை' (SOP)-யை உருவாக்க இருப்பதாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நியூயார்க்-டெல்லி விமானத்தில் பயணித்த 72 வயதான மூதாட்டி தனக்கு நேர்ந்த மிக மோசமான விமான பயணத்தைத் தொடர்ந்த வழக்கு விசாரணையிலேயே இந்த தகவலை டிஜிசிஏ தெரிவித்தது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு விமான பயணிக்கு எந்த அளவு பயணத்தின்போது மது வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கு எழும்பி இருக்கின்றது.
இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஏர் இந்தியா, ஆன்-போர்டு ட்ரிங் பாலிசி (On Board Drinking Policy)யை தழுவியே இந்த தகவலை இங்கே வழங்கி இருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது. விமான பயணத்தின்போது அனைவருக்கும் மதுபானம் வழங்கப்படுவதில்லை. 18 வயது பூர்த்தி பெற்றவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகின்றது.
பிராந்தி, விஷ்கி போன்ற அதிக போதை தரும் மதுபானாக இருப்பின் சிறிய பாட்டில் மட்டுமே ஒரு நபருக்கு வழங்கப்படும். அதுவே பீராக இருப்பின் 12 அவுன்ஸும், ஒயினாக இருப்பின் ஒரு முழு குவளை அளவிற்கு வழங்கப்படும். ஒரே நேரத்தில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
மேலும், நான்கு மணி நேரத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட விமானங்களில் இரண்டு பானங்களுக்கு மேல் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா அதன் ட்ரிங் பாலிசியில் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, ஒவ்வொரு ரவுண்டுக்கும் இடையில் மூன்று மணி நேரம் இடைவெளி இருக்கும் என்றும் அது கூறியிருக்கின்றது.
பயணிகள் தங்களுடைய இருக்கையில் இருந்தே மதுவை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், இருக்கையில் அமர்ந்தபடியே அந்த மதுவை அருந்த வேண்டும். ஆனால், இதுபோன்ற விதிகள் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணிப்போருக்கு பொருந்தாது. அதேநேரத்தில் மிகவும் மோசமான பயணியாக இருப்பின் அவருக்கு உடனடியாக மது வழங்குவதை நிறுத்தலாம் என்றும் விதிகள் கூறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் மூக்கு முட்ட யாருக்கும் மது வழங்கப்படாது என்பது மேலே உள்ள தகவலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தகவல் இது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவத்தை வைத்து பார்த்தால் இனி வரும் நாட்களில் யாருக்கும் மது வழங்கப்பட மாட்டாது என விமான நிறுவனங்கள் கூறும் நிலை உருவாகும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








