மிகவிரைவில் இந்திய சாலைகளை ஆள போகும் வாகனங்கள் இதுதான்... பெட்ரோல் டூ விலர்களுக்கு மோடி அரசின் செக்!
எரிபொருளால் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாட்டை முடக்கும் விதமாக, புதிய திட்டம் ஒன்றை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுபுறச் சூழலுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மாசடைதல். அதிலும், மிக முக்கியமாக காற்று மாசடைதல் என்பது மிக கொடுமையான ஒன்றாக இருக்கின்றது. ஏனென்றால், மாசுற்ற காற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கும் சரி, மற்ற ஜீவராசிகளுக்கும் பெரும் குந்தகத்தை விளைவிக்கும் வகையில் இருக்கின்றது.

பெரும்பாலும், காற்றை மாசுபடுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை இருக்கின்றது. இந்த புகை அதிகம் நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. அவ்வாறு, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில், கார்பன்டை மோனாக்ஸைடு, சல்பர் டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, ஃபார்மல் டிஹைட், பென்சேன் மற்றும் சூட் உள்ளிட்ட மிக கொடுமையான விச அமிலங்களைக் கொண்டதாக இருக்கின்றது.

இந்த நஞ்சு கலந்த காற்றினை சுவாசிப்பதன் காரணமாக ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்கள் நம்மை தாக்க வாய்ப்புள்ளன. ஏன், சில சமயங்களில் இந்த காற்றை சுவாசிக்கும் கர்ப்பிணிப் பெண்களின் கருவை சிதைக்கும் அளவிற்குக்கூட இந்த காற்று வீரியம் கொண்டதாக இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையைக் கட்டுபடுத்தும் விதமாக, எரிபொருள் வாகனங்களில், பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜினை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. ஆனால், இது நிரந்தர தீர்வு அல்ல, காற்று மாசை சற்றே தளர்த்தும் விதமாக இது இருக்கின்றது.

ஆகையால், இதுபோன்ற எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கும் விக்கும் வகையிலும், மத்திய அரசு அண்மைக் காலங்களாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதிலும், மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கான ஊக்குவிப்பு அதிகமாக காணப்படுகிறது.

அந்தவகையில், மக்கள் மத்தியில் மின் வாகன பயன்பாட்டை கொண்டும் செல்ல வேண்டும் என்பதற்காக ஃபேம் (FAME) திட்டம் தொடங்கப்பட்டது. மின் வாகனங்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதன்படி, இத்திட்டத்தின் மூலம் மின் வாகனங்களுக்கு மானியம் வழங்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும், எலக்ட்ரிக் வாகனங்கள், எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றன. ஆகையால், மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு மந்தமாகவே காணப்படுகிறது. இதையுணர்ந்த மத்திய அரசு, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்தது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேம் திட்டம்.

இந்நிலையில், மேலும் ஓர் அதிரடி நடவடிக்கையாக சாலை போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டினைக் கட்டுபடுத்தும் விதமாக வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இரு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அரசாணை வரைவை தயார் செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஐசி திறன்கொண்ட அனைத்து இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், 2023ம் ஆண்டு முதல் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ம் ஆண்டு முதல் பெட்ரோல் டூவிலர்களுக்கும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இருசக்கர வாகனங்கள்மீது மட்டும் ரூ. 800 முதல் 1,000 வரையிலான 'பசுமை வரி' விதிக்க இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதைத்தொடர்ந்தே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு இந்த புத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், மக்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications