துபாய்க்கு தனியொரு ஆளாக விமானத்தில் பயணித்த இந்திய பிஸ்னஸ்மேன்!! 3 மணிநேர மகாராஜா வாழ்க்கை!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் இந்திய பணக்காரர் ஒருவர் தனி ஒரு மனிதராக பயணம் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விமானத்தில் பறக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு ஆசையாக இருக்கலாம். இரண்டு, மூன்று முறை விமானத்தில் பயணித்தவர்களுக்கு நாம் மட்டும் ஒரேயொரு பயணியாக பயணித்தால் எவ்வாறு இருக்கும் என்ற ஆசை எழ ஆரம்பிக்கும்.

அடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு நிச்சயம் இது கனவாக இருக்கும். அது இங்கு ஒருவருக்கு நனவாகி உள்ளது. விமானத்தில் தனி ஒருவராக, எதோ விமானத்திற்கே சொந்தக்காரர் போல் அவருக்காகவே விமானம் இயக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அவரது பேட்டியிலும், தான் ஒரு மகாராஜா என்பதுபோல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 10 வருடத்திற்கு யுஏஇ-க்கு செல்வதற்கு கோல்டன் விசா வைத்துள்ளவர் எஸ்பி சிங் ஓபராய்.

கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். நமக்கு கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி பயணியாக இவர் ஒருவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா சிஸ்டம் சில தொழில் வல்லுநர்களுக்கும், முக்கிய உலகளாவிய ஆளுமைகளுக்கும் 10 ஆண்டுகளுக்கு அதன் வளைக்குடா மாநிலமான துபாய்க்கு பயணிக்க அனுமதிக்கிறது.

ஆசியன் கட்கா அறக்கட்டளையின் தலைவரும், அபெக்ஸ் நிறுவனங்கள் குழுவின் நிறுவனர் மற்றும் சேர்மனுமான எஸ்பி சிங் ஓபராய், சர்பத் டா பாலா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆவார். தனியாக விமானத்தில் பயணித்ததை ஓபராயும் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த தனி ஒரு ஆள் பயணம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் இருந்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமான பயணம் சமீபத்தில் தான் மீண்டும் துவங்கப்பட்டது. அதற்கு முன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியில் இருந்து கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் எஸ்பி சிங் ஓபராய் போன்ற கோல்டன் விஸா ஹோல்டர்களையும், மற்ற நாட்டு தூதர்களையும். இந்தியாவில் இருந்து வரும் தங்களது நாட்டை சேர்ந்தவர்களையும் ஐக்கிய அரபு ஆமிரக அதிகாரிகள் தங்களது நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

இதற்காகவே சில விமானங்கள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், முதலில் ஓபராய் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான அமைச்சக அதிகாரிகளின் தலையீட்டிற்கு பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








