சின்ன லைட் கூட இல்லாத ரன்-வேயில் விமானத்தை தரையிறக்கி 121 இந்தியர்களை காப்பாற்றிய விமான படை! எப்படி சாத்தியம்?
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களைக் காப்பாற்ற இந்திய விமானப்படையினர் சின்ன விளக்கு கூட இல்லாத இருட்டில் விமானத்தைத் தரையிறக்கி ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 121 இந்தியர்களைக் காப்பாற்றியுள்ளது. இது எப்படி சாத்தியம் என விரிவாகக் காணலாம் வாருங்கள்.
சூடான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்நாட்டில் ராணுவ தளபதியின் படையினருக்கும், துணை ராணுவ தளபதியின் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் உள்நாட்டுப் போராக தற்போது வெடித்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கும் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கும் அந்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தங்கள் சூடானில் உள்ள தங்கள் மக்களைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்திய அரசு சார்பில் "ஆப்ரேஷன் காவேரி" என சூடான் மக்களைக் காப்பாற்றும் முயற்சிக்கு ஈடுபட்டுள்ளது. இதற்காகச் சவுதி அரபியா நாட்டுடன் இந்தியா கை கோர்த்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜெட்டா விமான தளத்தில் இந்திய விமானப் படையின் பேஸ் கேம்ப் அமைத்து சூடானில் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சூடானில் உள்ள இந்திய மக்களைக் கப்பலில் ஏற்றி ஜெட்டாவிற்கு கொண்டு வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சூடான் தலைநகர் காஹர்தூம் பகுதியில் சுமார் 121 இந்தியர்கள் கடல் பகுதிக்கு வர முடியாத நிலையில் சிக்கித் தவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தற்போது அவர்களை மீட்க ஒரே வழி விமானம் தான். ஆனால் விமானத்தை சூடானில் தரையிறக்க தற்போதைய சூழ்நிலையில் அனுமதி வாங்க முடியாது. இதனால் மீட்புப் பணியில் உள்ள விமானப் படையினர் சூடானில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது பயன்படுத்தப்படாத விமான ஓடுபாதை ஒன்று அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சூடனிற்குத் தெரியாமலேயே அந்நாட்டின் அந்த ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கி மக்களை மீட்க முடிவு செய்தனர். ஆனால் அந்த ஓடுபாதை பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அதில் ஒளி விளக்குகள் கிடையாது. பகல் நேரத்தில் விமானத்தில் பறந்தால் அந்நாட்டுப் படையினர் கண்டுபிடித்து விமானத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் இரவு நேரம் தான் சரியான சாய்ஸ்.

இதையடுத்து இந்த பணிக்காக இந்திய விமானப் படையில் சி-130 ரக ஹெவி லிஃப்ட் விமானத்தைப் பயன்படுத்த முடிவு செய்தனர். அடுத்து துணிச்சலாக இந்திய விமானப் படை இரவு நேரத்தில் இருட்டிலும் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கிவிட முடியும். என முடிவு செய்தது. இதற்காக இந்திய விமானப் படையினர் விமானத்தில் உள்ள எலெக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ஃப்ராரெட் சென்சாரை பயன்படுத்தினர். அதன் விஷனை காணப் பிரத்தியேக நைட் விஷன் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர். இதைப் பயன்படுத்தி ஓடுபாதையில் எந்த வித தடுப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்து விமானத்தைத் தரையிறக்கினர்.
இந்த விமானத்திற்கும் 8 விமானப்படை வீரர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும். அவர்கள் விரைவாகச் செயல்பட்டு அடுத்த 7 நிமிடத்தில் அங்கு விமானத்திற்காகக் காத்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 121 பேரை விமானத்தில் ஏற்றினர். இது மிக முக்கியமான பணியாகும். விமானம் தரையிறங்கும் போதே சூடான் படையினருக்கு அவர்கள் அனுமதியில்லாமல் விமானம் தரையிறங்கிய விபரம் தெரிந்திருக்கும். அவர்கள் தாக்குதலுக்குத் தயாராவதற்கு முன்பு விமானம் அங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.
அதனால் விரைவாகச் செயல்பட்டு 121 பேரையும் 7 நிமிடத்திலேயே விமானத்தில் ஏற்றிவிட்டனர். உடனடியாக விமானம் அங்கிருந்து புறப்பட்டு ஜெட்டாவிற்கு வந்து சேர்ந்தது. சூடான் சுதாரித்துக்கொள்வதற்குள் இந்திய விமானம் சூடான் நாட்டு எல்லையையே தாண்டி விட்டது. இந்திய விமானப்படை அதிகாரிகளின் இருட்டிலும் பெரிய விமானத்தைத் தரையிறக்கி மீண்டும் டேக் ஆப் செய்தது பெரும் சாதனையாகும்.
தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற இந்தியா ராணுவ வீரர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இப்படியாகச் சாகச முறையில் மக்களைக் காப்பாற்றியது வெகு சில நாடுகள் தான். இதில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. சூடானில் உள்ள கடைசி இந்தியரைக் காப்பாற்றும் வரை "ஆப்ரேஷன் காவிரி" தொடரும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. சூடானிலிருந்து கடைசியாகப் புறப்படும் விமானம் அல்லது கப்பலில் தூதரக அதிகாரிகள் வருவார்கள். அப்பொழுது ஒரு இந்தியர் கூட சூடானில் சிக்கலில் இருக்க மாட்டார் என் இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
எந்த வித நேவிகேஷன் சப்போர்ட் இல்லாமல், எரிபொருள் ரீஃபில் செய்யும் வசதியில்லாமல், வெளிச்சம் இல்லாத ஓடுபாதையில் இந்திய விமானப்படை விமானிகள் விமானத்தைத் தரையிறக்கி அதில் மக்களை ஏற்றி 7 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி பத்திரமாக 121 பேரை ஜெட்டாவிற்கு அழைத்து வந்தை இந்திய அரசு மற்றும் மக்கள் பாராட்டி வருகின்றனர். ஜெட்டாவிலிருந்து இவர்கள் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படவுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபோது இந்திய அரசு இப்படியாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இறங்கியது. இந்திய விமானப்படை இப்படியாக வெளிநாட்டில் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை மீட்பதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அரங்கில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக வளர்ந்து வருகிறது. அதி நவீன கருவிகள், திறமையான ராணுவ வீரர்கள், துணிச்சலாக முடிவெடுக்கும் தலைமை எனப் பல இந்திய விமானப் படை உலகின் சிறந்த விமானப் படைகளில் ஒன்றாக இருக்கிறது. இவர்களுக்கு இது எல்லாம் ஈஸியான வேலைதான்!


Click it and Unblock the Notifications
