வளைச்சு வளைச்சு பிடிக்கறாங்க... 10 லட்சம் வாகனங்களுக்கு செக் வைத்த போலீஸ்... பெரிய ஆப்பா வெச்சுட்டாங்க!
சுமார் 10 லட்சம் வாகனங்களுக்கு காவல் துறையினர் செக் வைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு தொடர்வது, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரம் ஒன்று, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. டெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டெல்லியில் சுமார் 4 லட்சம் கார்கள் மீதும், 5 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மீதும் அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்தது, அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டியது மற்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டியது போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

''பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டில் 3,96,028 கார்கள் மற்றும் 5,16,018 இரு சக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என டெல்லி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாகனங்கள் மட்டுமல்லாது, மற்ற வகையை சேர்ந்த வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 1,05,318 இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான முறையில் ஓட்டியது, பெர்மிட் விதிமீறல்கள் மற்றும் அனுமதி இல்லாத இடங்களில் பார்க்கிங் செய்தது போன்ற காரணங்களுக்காக பள்ளி பேருந்துகள் மற்றும் கேப்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

76 பள்ளி பேருந்துகள் மற்றும் 97 ஸ்கூல் கேப்கள், போக்குவரத்து காவல் துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன. அத்துடன் டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,995 டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லேன் விதிமீறல், பார்க்கிங் விதிமீறல் மற்றும் அபாயகரமான முறையில் ஓட்டியது போன்ற காரணங்களுக்காக டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 59,233 டாக்ஸிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற விஷயத்தை அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்வது போல் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் நீங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் விபத்துக்களில் சிக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த பாதுகாப்பிற்காகவும், உங்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்களுக்காகவும் மற்றும் உங்களுடன் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








