முக்குக்கு முக்கு பிடிக்கறாங்க! இனி இத பண்ணலேனா வண்டில வீட்டு வாசலை கூட தாண்டீராதீங்க! சாட்டையை வீசும் போலீஸ்!
இந்திய சாலைகளில் நடைபெற்று வரும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு போக்குவரத்து விதிமுறை மீறல்களே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. ஒரு பக்கம் சாலைகள் மோசம் என்றாலும் கூட, இந்த உண்மையையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். எனவே சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணிகளை காவல் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான நகரங்கள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா. இந்த நகரங்களின் முக்கிய இடங்களில் எல்லாம் நேற்றைய தினம் (ஜூன் 6) காவல் துறை அதிகாரிகள் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒட்டுமொத்தமாக 8,406 வாகனங்களுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணம் செய்ததற்காக 5,210 பேருக்கும், 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனத்தை நிறுத்தியதற்காக 942 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தவறான லேனில் பயணம் செய்ததற்காக 589 பேருக்கும், சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி சென்றதற்காக 293 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததற்காக 263 பேருக்கும், நம்பர் பிளேட் விதிமுறைகளை மீறியதற்காக 237 பேருக்கும் காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்ற காரணத்திற்காக 173 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்திய காரணத்திற்காக 71 வாகன உரிமையாளர்களுக்கும், லைசென்ஸ் இல்லாமல் கார் மற்றும் பைக் ஓட்டியதற்காக 59 பேருக்கும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்திய காரணத்திற்காக 63 பேருக்கும், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக 42 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற விதிமுறைகளை மீறியதற்காக 464 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில், 8,406 பேருக்கு அபராதம் விதித்து, காவல் துறை அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர். இதுதவிர 46 வாகனங்கள் அதிரடியாக பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன. இதில், ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக கார்களும் அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலமாக வாகன ஓட்டிகள் இனி வரும் காலங்களிலாவது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என நாம் உறுதியாக நம்பலாம். இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கொள்கிறோம்.
நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்தும் தப்பிக்கலாம். சிறிய விஷயம்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். சில சமயங்களில் சிறிய தவறுகள்தான், மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரை பொறுத்தவரை, இது போன்ற வாகன தணிக்கைககள் தொடரும் என காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்து கொள்வது நல்லது. இதில் ஏதாவது பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில், சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








