மக்கள் எதிர்பார்த்தது இதுதான்... தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்...
தமிழக அரசுக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2017ம் ஆண்டு தரவுகளின்படி தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7.93 கோடி. தற்போது மக்கள் தொகை 8 கோடிகளை கடந்திருக்கும். ஆனால் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறதா? என்பது சந்தேகமே. பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

அதற்கு மாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில், பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி, படிக்கட்டுகளில் தொங்கி கொண்டுதான் பயணம் செய்கின்றனர். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கூட பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி நம் மனதை பதைபதைக்க வைக்கின்றன. இந்த பிரச்னை ஏதோ நேற்று தொடங்கியதல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து கொண்டிருக்கும் பிரச்னை இது. ஆனால் இதனை களைய அரசு தரப்பில் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

பஸ்கள் மட்டுமல்லாது ஷேர் ஆட்டோக்களிலும் இதே நிலைதான். ஷேர் ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். வேறு வழியில்லாமல் பயணிகளும் நெருக்கடித்து கொண்டு பயணம் செய்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் செல்லப்பன். இவர் ஈரோட்டை சேர்ந்தவர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கூடுதல் போக்குவரத்து ஆணையரிடம் இருந்து பெற்ற தகவல்களும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கமான புறநகர் பேருந்துகளில் அதிகபட்சமாக 55 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். அதே சமயம் மினி பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே.

ஷேர் ஆட்டோக்களை எடுத்து கொண்டால், டிரைவர் தவிர அதிகபட்சமாக 5 பேர் பயணிக்கலாம். ஆனால் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில், இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியும். இதுகுறித்து மனுதாரர் செல்லப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு சட்ட ரீதியிலான விதிமுறைகள் தெரியும்.

அந்த அறிவை பெற்றுள்ளபோதும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் இரண்டு மடங்கு அதிக பயணிகளை டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்றிச்செல்கின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்களில் 10 பேர் வரை பயணம் செய்கின்றனர். இத்தகைய விதிமீறல்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் பயணிகளுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு மனுதாரர் செல்லப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இன்ஜின் மற்றும் இதர திறன்களை பொறுத்தே அதில் எவ்வளவு பயணிகளை ஏற்றி செல்லலாம் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதால், வாகனத்திற்கும் அதிக சேதாரம் ஏற்படுகிறது. இதனால் வாகனத்தின் பராமரிப்பு செலவு அதிகரிக்கிறது. மனுதாரர் செல்லப்பன் இதனையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பஸ்களில் காணப்படும் கூட்ட நெரிசலே, பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்ல முக்கிய காரணம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு நேற்று (ஏப்ரல் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய விதிமீறல்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கூட்டநெரிசல் மிகுந்த பஸ்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனம் திரும்பியிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








