வேகமாக போறது மட்டும் தப்பு கிடையாது, இப்படிப் போனாலும் ரொம்ப தப்பு - கோர்ட் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!
வேகமாக வாகனம் ஓட்டுவது மட்டுமல்ல கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் பொறுப்பில்லாமல் வாகனம் ஓட்டும் வகையில் தான் சேரும் எனச் சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்றம் ஒரு விபத்தில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனால் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து நடந்தால் அந்த விபத்திற்குக் கவனக்குறைவும் முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி டில்லியில் டில்லி போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான ஒரு பஸ் நடுரோட்டில் எந்த சிக்னலும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதைக் கவனிக்காமல் பின்னால் வந்த டூவீலர் ஓட்டி ஒருவர் பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானார். இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து நடந்த வழக்கில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ17 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கி உத்தரவிட்டது. இதில் டூவீலரில் வந்தனர் கவனக்குறைவாக வந்ததும் விபத்திற்குக் காரணம் என்பதால் இந்த நஷ்ட ஈட்டில் 20 சதவீதத்தைக் கழித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதற்கிடையில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயமே இந்த நஷ்ட ஈட்டிற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் பணத்தைச் செலுத்தும் நாள் வரை ஆண்டிற்கு 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவ்ரங் காந்த் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணையில் இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளின்படி பஸ் நடுரோட்டில் எந்த வித சிக்னலும் இல்லாமல் நின்றதே விபத்திற்கு முக்கியமான காரணம்.
இருந்தாலும் டூவீலரில் வந்து விபத்தில் பலியானவர் சற்று கவனமாக வந்திருந்தால் இந்த பஸ்சை ஓவர்டேக் செய்து சென்றிருக்க முடியும். அவரது கவனக்குறையும் விபத்திற்கு ஒரு வகையில் காரணமாக அமைகிறது. வேகம் மட்டும் அலட்சியமான டிரைவிங் எனச் சொல்லிவிட முடியாது. இப்படியாக கவனக்குறைவாக வருவது அலட்சியமான டிரைவிங் தான்.

இதனால் தீர்ப்பாயம் அறிவித்த 20 சதவீத குறைப்பை மாற்ற முடியாது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் வருமானம் மற்றும் பிற விஷயங்களைக் கணக்கிட்டு நஷ்ட ஈட்டை ரூ42 லட்சமாக உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் விபத்தில் உயிரிழந்தவர் ஒரு அரசு காண்ட்ராக்டர் ஆவார். இவர் விபத்தில் உயிரிழக்கும் போது இவருக்கு வயது 54.
அப்பொழுது இவரை நம்பி இவரது தாய், மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 7 பேர் இருந்தனர். இந்நிலையில் முதலில் தீர்ப்பாயம் ரூ17,49,491 நஷ்ட ஈடாகவழங்க முன் வந்தது. தற்போது அதை அரசு ரூ42,16,747.88 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால் இதில் 20 சதவீதம் குறைக்கப்படும்.
அப்படியென்றால் ரூ8,43,349 குறைக்கப்படும். அப்படி என்றால் அந்த குடும்பத்திற்கு ரூ33,73,397 நஷ்ட ஈடாகவழங்கப்படும். இதற்கான ஆண்டு வட்டி விகிதமாக 7.5 சதவீதம் வட்டியையும் சேர்த்து கணக்கிட்டு அவர்கள் வழக்கைப் பதிவு செய்த நாளிலிருந்து பணம் செலுத்தப்படும் நாள் வரை வட்டியைக் கணக்கிட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ் ஸ்பார்க் என்ன நினைக்கிறது?: பெரும்பாலும் பலருக்குச் சாலையில் வேகமாக வாகனம் ஓட்டுவது தான் ஆபத்தானது, மெதுவாக வாகனம் ஒட்டினால் பிரச்சனை வராது என்ற நினைப்பு இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. சாலையில் வாகனங்களில் பயணிக்கும் போது வேகத்தை விடக் கவனம் தான் முக்கியம். கவனமாக எதிரில் வரும் வாகனங்களைக் கவனித்து வாகனத்தை ஓட்டவேண்டும். இல்லை என்றால் எவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த வழக்கே சாட்சி!


Click it and Unblock the Notifications








