"ஆக்சிஜன் பற்றா குறையால் இனி ஒரு உயிர்கூட போக கூடாது" -பேருந்துகளையே ஆக்சிஜன் மையமாக மாற்றிய எடியூரப்பா!
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பேருந்துகளையே ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால், எண்ணற்ற உயிர்கள் தினந்தோறும் பரிதாபமாக பலியாகி வருகின்றன. இந்தியாவின் இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் உலக நாடுகள் பல உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

கப்பல் மற்றும் விமானங்களின் வாயிலாக மருத்துவ ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா ஆக்சிஜன் பேருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார்.

அதாவது, பொது பேருந்துகளை தற்காலிகமாக ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் இருக்கும் இருக்கைகள் நீக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இத்துடன், நோயாளிகள் வசதியாக அமர்ந்துக் கொள்ளும்படி இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய பேருந்துகளையே அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

இதுகுறித்து ஆக்சிஜன் சிலிண்டர் பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோது பேசிய எடியூரப்பா, "கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் நாட்டில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிர் பலிகள் மாநிலத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது" என்றார்.

மேலும் பேசிய அவர், "இனி இத்தகைய துற்சம்பவங்கள் மாநிலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்து சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது" என்றார். தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இப்பேருந்துகள் நிச்சயம் உதவும்" என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தற்போது முதற் கட்டமாக இருபது பேருந்துகள் ஆக்சிஜன் வசதியுடன் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் முக்கியமான மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும் சுமார் 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய இருக்கை வசதிக் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடையவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக ஆக்சிஜன் மாறியிருக்கின்றது. ஆனால், தேவையைக் காட்டிலும் உற்பத்தி மிகக் குறைவாகவே நமது நாட்டில் காணப்படுகின்றது. இதன் விளைவாக ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை ஆகியவற்றின் தட்டுப்பாடுகளுடன் ஆக்சிஜனும் இணைந்திருக்கின்றது.

இந்த தட்டுப்பாட்டை ஒழிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களின் உயிரைக் காக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








