நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இதன் காரணமாக மருத்துவ ஆக்ஸிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையும் மிகவும் அதிகமாக இருக்கிறது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அதிக அளவிலான டேங்கர் லாரிகள் களமிறங்கியுள்ளன. ஆனால் இந்த டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. எனவே ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பேரில் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவதற்காக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு 10 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வரும் மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இந்த பங்களிப்பை அந்த அமைப்பு செய்யவுள்ளது.

ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம், ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் எளிமையான காரியமாக இருக்கும். மருத்துவமனைகளுக்கு தடையில்லாமல் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த டேங்கர் லாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், ''இந்த பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் வாய்ப்பு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.

எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் இது ஒரு சிறிய உதவிதான். உயிர் காக்கும் ஆக்ஸிஜனை உரிய நேரத்தில் கிடைக்க செய்வதன் மூலம், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும்'' என்றார். மருத்துவ ஆக்ஸிஜனை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க செய்வது மிகவும் முக்கியமானது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் செய்திகள் நமக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம் டேங்கர் லாரிகளை உரிய முறையில் கண்காணித்து மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்க செய்வதை அதிகாரிகளால் உறுதி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications