ஏன்ய்யா... கார்கள் இறக்குமதிக்கு இவ்ளோ பணம் செலவு பண்றீங்க!! பாகிஸ்தானில் பொருளாதாரம் சரியாகாது போலயே!!
பொருளாதார சரிவு, எந்தவொரு நாட்டையும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி கொண்டு சென்றுவிட கூடியது. பொருளாதார சரிவால் பல ஆண்டுகளாக சிக்கி சின்னாபின்னமாகிய நாடுகளை எல்லாம் முந்திய காலங்களில் வரலாற்றில் பார்த்துள்ளோம். இவ்வளவு ஏன், இப்போதும் கூட சில நாடுகள் அத்தகைய நிலையை எதிர்கொண்டு தான் வருகின்றன.
அந்த நாடுகளுக்கு சிறந்த உதாரணமாக நமது நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானை சொல்லலாம். இருப்பினும் இலங்கை நாடு இந்தியா போன்ற நாடுகளிடம் கடனுதவியை பெற்று ஓரளவிற்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கடந்த பல மாதங்களாகவே பொருளாதார சரிவால் நிதி இழப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கடந்த காலங்களில் ஆட்டோமொபைல் வாகனங்கள் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கூட மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இதனாலேயே இறக்குமதிகளை குறைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் சில திட்டங்களையும், இறக்குமதிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு கொண்டுவந்தது. இந்த நடவடிக்கைகள் மூலம் நிலைமை சீராகியுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வழக்கம்போல் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பாகிஸ்தானியர்கள் அதிக பணத்தை செலவழித்துள்ளனர்.
குறிப்பாக, ஆட்டோமொபைல் வாகனங்கள் இறக்குமதிக்காக மட்டும் கடந்த 6 மாதங்களில் 120 கோடி அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானில் செலவிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஆனது 9738 கோடி ரூபாய் ஆகும். இத்தகைய இமாலய தொகையில் லக்சரி கார்கள், உயர் தரத்திலான எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அவற்றிற்கான பாகங்களும் கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் மக்களால் வாங்கப்பட்டுள்ளன. இந்த இறக்குமதிக்கான தொகை அதிகம் தான் என்றாலும், இதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.

அப்படியென்றால், பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டில் தனது நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்துவதற்கு முன்பு அந்த நாட்டில் வாகனங்கள் இறக்குமதி எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள். இப்போதும் கூட நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய பட்ஜெட் விலை கொண்ட வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதே பாகிஸ்தானில் குறைந்துள்ளதே தவிர்த்து, விலைமிக்க லக்சரி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது எப்போதும் போல் அங்கு தூள் கிளப்பி வருகிறது.
எந்த அளவிற்கு என்றால், கடந்த 6 மாதங்களில் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான தொகையில் (120 கோடி டாலர்கள்) கிட்டத்தட்ட பாதி, அதாவது 53.05 கோடி டாலர்கள் முற்றிலுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் (CBU) மற்றும் முழுவதுமாகவோ/ பாதி அளவிலேயோ பாகங்களாக கொண்டுவரப்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களை (CKD/SKD) இறக்குமதி செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக லக்சரி வாகனங்கள் சிபியூ அல்லது சிகேடி முறையிலேயே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

நம் இந்தியாவிலும் கடந்த பல காலமாக அவ்வாறே லக்சரி வாகனங்கள் விற்கப்பட்டு வந்தன. தற்போதுதான் மெல்ல மெல்ல மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற லக்சரி கார் பிராண்ட்கள் இந்தியாவிலேயே முழுவதுமாக தங்களது லக்சரி கார்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளன. இத்தகைய நிலையை பாகிஸ்தான் எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகலாம். ஏனெனில் பாகிஸ்தானில் சிகேடி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பினும் தற்போதுவரையில் பல மில்லியன் டாலர்களுக்கு சிகேடி பாகங்கள் அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
சிகேடி என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேறொரு நாட்டில் பாகங்களை தயாரித்து, விற்பனை செய்ய விரும்பும் நாட்டில் அவற்றை இறக்குமதி செய்து முழு வாகனமாக தயாரித்து விற்பனை செய்வதாகும். இவ்வாறு சிகேடி பாகங்கள் இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பல மில்லியன் டாலர்களுக்கு அவை இறக்குமதி செய்யப்படுவது, வாகனங்கள் இறக்குமதியை குறைக்க முயலும்போதிலும் லக்சரி வாகனங்களின் இறக்குமதிகள் எப்போதும்போல் சிறப்பாக இருப்பது பாகிஸ்தான் அரசின் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications