என்ன தான் நடக்குது பாகிஸ்தானில்... புதிய கார்களை வாங்க ஆள் இல்லை - பிப்ரவரியில் மொத்தமாகவே இவ்வளவுதான் விற்பனை
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாகவே சில ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி முழுமையாக தொடர்ந்து பார்க்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சில கடுமையான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது. முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அந்த நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் சில நடவடிக்கைகள் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதான் அந்த நாட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானில் நேரடியாக வாகன விற்பனையை பாதித்துள்ளன. இது அந்த நாட்டின் கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த பிப்ரவரியில் வெறும் 5,672 பயணிகள் வாகனங்கள், அதாவது கார் மற்றும் வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே நமது இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், நம் நாட்டில் கடந்த மாதத்தில் நாள் ஒன்றில் நிச்சயமாக 5,672க்கும் அதிகமான பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருக்க வேண்டும். அதாவது, பாகிஸ்தானின் ஒரு மாத விற்பனை எண்ணிக்கை ஆனது இந்தியாவில் ஒரு முழு நாள் கூட கிடையாது, அரை நாளிலேயே பதிவாகி விடுகிறது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக 10,000க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி உள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பும் பாகிஸ்தானில் வாகனங்கள் விற்பனை பெரிய அளவில் இருந்ததில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் 21,664 பயணிகள் வாகனங்களே அந்த நாட்டில் விற்பனையாகி இருந்தன. இதனை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் பதிவாகியுள்ள 5,672 என்ற விற்பனை எண்ணிக்கை ஆனது 73% குறைவு ஆகும்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலும் சில பல சவால்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவில் பயணிகள் வாகன பிரிவில் இறக்குமதி வாகனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வாகனங்கள் என இரண்டும் சரியான கலவையில் உள்ளன. ஆனால் பாகிஸ்தானில் சமீபத்திய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வரையில் பயணிகள் வாகனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியே செய்யப்பட்டன.

ஆனால் அத்தகைய இறக்குமதி வாகனங்களுக்கு பாகிஸ்தானில் தற்போது அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கார்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளதால், புதிய கார்களை வாங்குவதில் பாகிஸ்தான் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதன் விளைவாகவே கடந்த மாதத்தில் வெறும் 5,672 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் பாகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சுஸுகி, ஹோண்டா போன்ற சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








