இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது பிஏஎல் வி பறக்கும் கார்!!
இந்தியர்களும் பிஏஎல்வி பறக்கும் காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
பிஏஎல் வி பறக்கும் காரை இந்தியர்களும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிஏஎல் வி நிறுவனம் உலகின் முதல் வர்த்தக ரீதியிலான பறக்கும் காரை கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பறக்கும் காரை முன்பதிவு செய்வதற்கு பெரும் பணக்காரரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த பறக்கும் காருக்கு இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பறக்கும் கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவது தெரிய வந்துள்ளது.

பிஏஎல் வி நிறுவனம் இரண்டு பறக்கும் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. லிபர்டி பயனீர் மற்றும் லிபர்டி ஸ்போர்ட் என்ற பெயர்களில் வருகிறது. இதில், லிபர்டி பயனீர் பறக்கும் கார் சிறப்பு பதிப்பு மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 90 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

அதாவது, வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பறக்கும் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. லிபர்டி ஸ்போர்ட் சாதாரண மாடலாக இருக்கும். இந்த பறக்கும் காரில் பறப்பதற்கும், சாலையில் செல்வதற்கும் என இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

சாலையில் செல்லும்போது 99 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சினில் இயங்கும். பறக்கும்போது 198 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சினில் இயங்கும். இந்த கார் சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்திலும், பறக்கும்போது மணிக்கு 180 கிமீ வேகத்திலும் செல்லும். லிட்டருக்கு 13.16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பறக்கும் கார் 664 கிலோ எடை கொண்டது. 910 கிலோ எடை வரை சுமந்து கொண்டு பறக்கும். வெறும் 5 நிமிடங்களில் இந்த கார் பறக்கும் வகையிலும், சாலையில் செல்லும் வகையிலும் தயாராகி விடும். மேலும், சாலையில் செல்லும்போது இதன் ரோட்டர் பிளேடுகள் காருடன் சேர்ந்து மடங்கிக் கொள்ளும்.

இந்த காரை ஓட்டுவதற்கு பிரத்யேக லைசென்ஸ் தேவைப்படும். நாம் நினைப்பது போல எந்த இடத்திலும் மேல் எழும்பி பறப்பதற்கோ அல்லது தரை இறக்கவோ முடியாது. இதற்காக சிறிய விமான ஓடுபாதை தேவைப்படுமாம்.

இந்திய மதிப்பில் லிபர்டி பயனீர் மாடல் ரூ.3.78 கோடி விலையிலும், ஸ்போர்ட் மாடல் ரூ.2.78 கோடி விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காருக்கு உலக அளவில் முன்பதிவு பெறப்படுகிறது.

இந்த பறக்கும் காரில் இரண்டு பேர் செல்ல முடியும். தற்போது இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு இந்த பறக்கும் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. லிபர்டி காருக்கு 25,000 டாலர்கள் முன்பணத்துடனும், லிபர்டி ஸ்போர்ட் மாடலுக்கு 10,000 டாலர்கள் முன்பணத்துடன் முன்பதிவு பெறப்படுகிறது. இதை திரும்ப பெற முடியாது.

இந்த நிலையில், இந்த காருக்கு இந்தியாவில் காப்புரிமை கிடைத்தவுடன்தான், இதுபற்றிய உறுதியான விபரங்களை நாம் சொல்ல முடியும். எனினும், முன்பதிவு அல்லது கூடுதல் விபரங்கள் தேவைப்படுபவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.
புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் படங்கள்!
புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் சென்று காணலாம்.


Click it and Unblock the Notifications








