ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்கு மாநில முதல்வரின் காஸ்ட்லீ பரிசு... பெற்றோர்களுக்கு தலை கால் புரியல!!
2024 பாரீஸ் ஒலிம்பிக் (Paris Olympic)-இல் மொத்த பாகிஸ்தான் நாட்டையும் பெருமைப்படுத்தி உள்ளவர் அர்ஷத் நதீம் (Arshad Nadeem). ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளி அர்ஷத் நதீம் தங்க பதக்கத்தை வென்றார். இதனை பாகிஸ்தானில் ஒவ்வொரு மக்களும் தாங்கள் பெற்ற வெற்றி போல் கொண்டாடி வருகின்றனர். இதனால், அர்ஷத் நதீமுக்கு பரிசு பொருட்கள் குவித்து வருகின்றன. இந்த வரிசையில், அர்ஷத் நதீம் வசிக்கும் மாநிலத்தின் முதலமைச்சர் அட்டகாசமான பரிசு பொருட்களை அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய செய்திக்குள் போகலாம், வாங்க.
1948 லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வந்தாலும், பாகிஸ்தான் சார்பில் 4 தங்க பதக்கங்கள் மட்டுமே இதுவரையில் பெறப்பட்டுள்ளன. இதில், 4வது தங்க பதக்கத்தை 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பெற்றார். 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, ஈட்டி எறிதல் போட்டி வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார். இதே போட்டியில், நம் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை சொந்தமாக்கினார்.

ஒலிம்பிக்கில் கடைசியாக பாகிஸ்தான் தங்க பதக்கம் வென்றது 1988 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆகும். ஒலிம்பிக்கில் தனி நபர் போட்டியில் பாகிஸ்தான் தங்க பதக்கம் வென்றது இதுவே முதல்முறை ஆகும். இதன் காரணமாகவே, பாகிஸ்தானில் அர்ஷத் நதீமை மக்கள் அனைவரும் ஹீரோ போல் பார்க்கின்றனர். இதனால், அர்ஷத் நதீமுக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து பரிசுகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் நேரடியாக அர்ஷத் நதீமின் வீட்டிற்கு சென்று 10 கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்துடன், புத்தம் புதிய ஹோண்டா சிவிக் (Honda Civic) கார் ஒன்றும் அர்ஷத் நதீமின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஹோண்டா காரில் 'PAK-92.97' என்கிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையாக 92.97 மீட்டர் தூரத்திற்கு அர்ஷத் நதீம் ஈட்டி எறிந்ததை நினைவுக்கூரும் விதமாக இவ்வாறு ஸ்பெஷலாக பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட் உடன் ஹோண்டா சிவிக் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அர்ஷத் நதீமின் பயிற்சியாளருக்கும் 50 இலட்சம் பாகிஸ்தான் ரூபாயை வழங்கிய பின் பேசிய பாகிஸ்தான் பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ், "அர்ஷத் நதீம் தேசத்திற்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளார்" என கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சரிஃப், அர்ஷத் நதீம் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் இல்லத்தில் இரவு விருந்துக்கு அழைத்துள்ளார். கோல்டு மெடலிஸ்ட் அர்ஷத் நதீமுக்கு வழங்கப்பட்டுள்ள ஹோண்டா சிவிக் கார் பாகிஸ்தானில் ஓரியல் மற்றும் ஆர்.எஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலைகள் அங்கு 86.59 லட்சம் மற்றும் 98.99 லட்சம் பாகிஸ்தான் ரூபாயாக உள்ளன. நம் இந்திய ரூபாயில் இவற்றின் மதிப்பு ரூ.26.99 லட்சம் & ரூ.29.82 லட்சம் ஆகும்.

இந்தியாவில் தற்சமயம் ஹோண்டா சிவிக் கார் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்த சமயத்தில் சிவிக் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.22.35 லட்சம் வரையில் இருந்தன. 10வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் 2019 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் அடுத்த 1 வருட காலத்திற்கு சிவிக் கார்களின் விற்பனை நன்றாக இருந்தது என்றாலும், 2020 டிசம்பரில் இந்தியாவில் சிவிக் காரின் விற்பனையை ஹோண்டா நிறுத்தியது.
பாகிஸ்தானில் ஹோண்டா சிவிக் கார் 1.5 லிட்டர் DOHC 16-வால்வு எர்த் ட்ரீம் டெக்னாலஜி என்ஜின் மற்றும் 1.8 லிட்டர் SOHC 16-வால்வு என்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த என்ஜின் உடன் அர்ஷ்த் நதீமுக்கு சிவிக் கார் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் சிவிக் காரில் பவர் ஸ்டேரிங், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், அலாய் சக்கரங்கள், சன்ரூஃப், லெதர் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதற்காக அர்ஷத் நதீமுக்கு ஏற்கனவே சுஸுகி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் தொழிலதிபர் அறிவித்து இருந்தார். ஒலிம்பிக்கில் கோல்டு வென்றவருக்கு இவ்வளவு விலை குறைவான கார் பரிசா? என இந்தியாவில் பலரும் நக்கலடித்தனர். இந்த நிலையில்தான், ஹோண்டா சிவிக் கார் அர்ஷத் நதீமுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









