நல்லா லவ் பண்ணுங்க... ஸ்லோவா போங்க... இனி இந்த ஊரில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வண்டி ஓட்ட கூடாது!
முக்கிய நகரம் ஒன்றில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பயணிக்க கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், லவ் மற்றும் ரொமான்ஸ் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. இங்கு அதிகாரிகள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பை பாரிஸ் அதிகாரிகள் தற்போது அதிரடியாக குறைத்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவிற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இதன்படி பாரிஸ் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும். இதன் மூலமாக இரண்டு முக்கியமான நன்மைகள் கிடைக்கும் என பாரிஸ் அதிகாரிகள் நம்புகின்றனர். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் முதல் நன்மை.

உண்மையில் உலகில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகம்தான் காரணமாக உள்ளது. பெங்களூர் நகரின் கோரமங்களா பகுதியில் இன்று காலை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஒரு சாலை விபத்தை கூட இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ-வின் மகன் உள்பட ஒட்டுமொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில், கார் அதிவேகமாக வந்தது முக்கியமான காரணமாக உள்ளது. வாகனங்கள் அதிவேகத்தில் சென்றால், உடனடியாக கட்டுப்படுத்த முடியாது. எனவே எதிர்பாராத விதமாக விபத்து நிகழலாம்.

எனவேதான் பாரிஸ் நகரின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தலாம் என்பது இந்த உத்தரவிற்கு பின்னால் உள்ள இரண்டாவது காரணம். ஆனால் இந்த உத்தரவை பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

குறிப்பாக உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பது டெலிவரி செய்பவர்களின் கருத்து. அதே சமயம் இந்த உத்தரவு தொழிலை பாதிக்கும் என டாக்ஸி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு காரணமாக டாக்ஸி வாடகையை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், இந்த உத்தரவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இனி பாரிஸ் சாலைகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் (ஆகஸ்ட் 30) இந்த உத்தரவு அமலுக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவையோ அல்லது மற்ற போக்குவரத்து விதிமுறைகளையோ மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாரிஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த உத்தரவு காரணமாக பாதசாரிகளுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும்.

சில சமயங்களில் சாலை விபத்துக்களில் பாதசாரிகள் பரிதாபமாக படுகாயமடைய நேரிடுகிறது. உயிரிழப்புகளும் கூட நிகழ்கின்றன. எனவே சாலைகளை பாதசாரிகளுக்கு உகந்த வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு பாதசாரிகளுக்கு நட்பாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளன. இதற்காக வாகன வடிவமைப்பில் கூட மாற்றங்களை மேற்கொள்வது படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பாரிஸ் மட்டுமல்லாது மேலும் சில பிரான்ஸ் நகரங்களிலும் தற்போது அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 30 கிலோ மீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற வேக வரம்பை கட்டுப்படுத்துவதுடன் தற்போது சைக்கிள் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. இதே நோக்கத்திற்காக ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது உயர்ந்து வருகிறது. இன்று கூட 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவை விற்பனைக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications