உயிர்களை காக்கும் டாக்டருக்கா இப்படி நடக்கணும்... நள்ளிரவில் வேலையை காட்டியுள்ள திருடர்கள்!!
தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினால் பலர் தங்களது சொந்த வாகனங்களை வெளியில் எடுத்தே பல நாட்களாகி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீண்ட தூர பயணங்கள் எல்லாம் தற்போதைய சூழலில் முடியாத ஒன்றே.
Source: Jagran

பைக் என்றால் கூட பரவாயில்லை, அருகில் இருக்கும் பகுதிகளுக்கு எடுத்து சென்று வருகிறோம். ஆனால் காரை வெளியில் எடுத்து செல்வது எல்லாம் மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும் அடிக்கடி காரை ஸ்டார்ட் செய்து, குறைந்தது சில அடி தூரம் நகர்த்தியாவது வைக்க வேண்டும் என மெக்கானிக்குகள் கூறுகின்றனர்.

ஏனெனில் ஊரடங்கினால் நீண்ட நாட்களுக்கு காரை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் பல விதமான இயந்திர பாகங்களின் பிரச்சனைகளையும், அதற்கு பெரும் தொகையையும் செலவழிக்க வேண்டியதாகிவிடும். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு கவனிப்பாற் இன்றி நிறுத்தி வைக்கப்படும் கார்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறவும் வாய்ப்புள்ளது.

ஆனால் உண்மையில் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் கார்களில் தான் திருட்டு சம்பவங்கள் அரங்கேறும் என்றில்லை. ஏனெனில் ஓர் இரவுக்குள்ளும் அரங்கேறலாம். அதற்கு ஒரு உதாரணத்தை பற்றியே இந்த செய்தியில் இனி பார்க்க போகின்றோம்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் சிவில் மருத்துவமனையில் ஆகாஷ் என்னும் மருத்துவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். டாக்டர் ஆகாஷ் எப்போதும் போல் தனது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றுள்ளார்.

பிஸியாக பணியில் இருந்ததினால் மருத்துவருக்கு தனது காரின் மீது நினைப்பே வரவில்லை போல. எப்போதும் நிறுத்தும் இடம் தானே என்று கொஞ்சம் அசால்ட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இரவு பணி முடித்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்த போது டாக்டருக்கு மிக பெரிய ஷாக் காத்து கொண்டு இருந்துள்ளது.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர் தனது காரை நோக்கி நடந்துள்ளார். காருக்கு அருகே செல்ல செல்ல தனது காரில் சக்கரங்கள் இல்லை என்பதையும், அவற்றை யாரோ கழற்றி எடுத்து, அந்த இடத்தில் கற்களை வைத்து சென்றுள்ளனர் என்பதையும் பார்த்து ஆகாஷ் அதிர்ந்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஆகாஷ் கூறுகையில், பதான்கோட் சிவில் மருத்துவமனையின் கொரோனா தனிமை வார்டில் பணியாற்றி வருகிறேன். கார்களின் சக்கரங்கள் திருடுப்போன சமயத்தில் எனக்கு நைட் ஷிஃப்ட். இதனால் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
நள்ளிரவு, இருட்டை பயன்படுத்தி கொண்டு காரின் 4 சக்கரங்களையும் திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரி டாக்டர் ராகேஷ் சர்பால் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
ஆனால் உண்மையில் இந்த திருடகளை பலே திருடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெரிய அளவில் எந்த உபகரணமும் இன்றி காரின் சக்கரங்களை அவர்கள் கழற்றியுள்ளனர் என்பது காரின் இரு பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ள செங்கற்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. இதனால் குறைந்தது 3,4 திருடர்களாவது இந்த செயலில் ஈடுப்பட்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








