செம சூப்பர்... பீகாரில் ஓடப்போகும் புத்தம் புதிய பஸ்களின் ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா?
பீகார் தலைநகர் பாட்னாவில் புதிய சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், 50 புதிய சிஎன்ஜி பேருந்துகளை, அம்மாநில போக்குவரத்து துறை இயக்கவுள்ளது. இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அத்துடன் 12 புதிய பம்ப்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.

ஆனால் இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் பாட்னாவில் 20 சிஎன்ஜி பேருந்துகளை பீகார் மாநில சாலை போக்குவரத்து கழகம் இயக்கி கொண்டுள்ளது. இவை அனைத்தும் டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்டவை ஆகும்.

பெய்லி சாலை, டானாபூர் உள்ளிட்ட வழித்தடங்களில் அவை இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் மேலும் 50 புதிய சிஎன்ஜி பேருந்துகள் வரும் ஜனவரி மாதம் இணையவுள்ளன. இதுகுறித்து பீகார் மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் திறன்மிக்கவையாகவும், சிக்கனமானவையாகவும் இருக்கும்.

அத்துடன் பாட்னா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த இவை உதவி செய்யும். டெல்லியில் இருப்பதை போன்று தாழ்தள சிஎன்ஜி பேருந்துகள் பாட்னாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர். இதுதவிர டீசலில் இயங்க கூடிய ஆட்டோக்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவது குறித்தும் போக்குவரத்து துறை ஆலோசனை செய்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டீசல் மூலம் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவது அல்லது அவற்றுக்கு பதிலாக புதியவற்றை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றனர். பாட்னா நகரில் தற்போதைய நிலையில் சுமார் 5,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி மூலம் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே சிஎன்ஜி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பாட்னா நகரில் 12 புதிய ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக பாட்னா உள்ளது. வாகன உமிழ்வுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

எனவே பாட்னா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றனர். பாட்னா மட்டுமல்லாது இந்தியா முழுவதிலுமே தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக், சிஎன்ஜி போன்ற வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய அரசும், டெல்லி போன்ற மாநில அரசுகளும் மானியங்களை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications