பழைய வண்டிகளின் கதை முடிந்தது! யாரும் எதிர்பாக்காத அதிரடியை செய்த மோடி அரசு! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
பழைய வாகனங்களுக்கு செக் வைக்கும் அதிரடி திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பழைய வாகனங்களை 'ஸ்கிராப்' செய்வதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வரும் என்பது ஒன்றிய அரசின் நம்பிக்கை.

இந்த சூழலில், பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய வாகனங்களின் உரிமையாளர்கள், வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வேண்டுமென்றால், வழக்கமான கட்டணத்தை விட சுமார் 8 மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

வர்த்தக வாகனங்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு பொருந்தும். ஃபிட்னஸ் சான்றிதழை புதுப்பிக்கும்போது, லாரிகள் மற்றும் பேருந்துகளின் உரிமையாளர்களும் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேலான எந்தவொரு காரின் பதிவையும் புதுப்பிக்க வேண்டுமென்றால், 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் வெறும் 600 ரூபாய் மட்டுமே. அதேபோல் பழைய இரு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கு 1,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதற்கு தற்போதைய கட்டணம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் வர்த்தக வாகனங்கள் என்றால், பதிவை புதுப்பிப்பதற்கு 12,500 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான தற்போதைய கட்டணம் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் வாகனங்களின் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், கூடுதல் அபராதங்களும் விதிக்கப்படும்.

தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் 500 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள், ஃபிட்னஸ் சான்றிதழை புதுப்பிக்க தவறினால், ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அதே நேரத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை இயக்க கூடாது என்ற தடை தொடரும்.

இந்த விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய அறிவிப்புகள் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் தவிர்த்து, இந்தியாவின் மற்ற பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்த கூடாது என ஒன்றிய அரசு விரும்புகிறது. பழைய வாகனங்களால் காற்று மாசுபடுவதுதான் இதற்கு காரணம்.

தனியார் வாகனங்கள் என்றால், 15 ஆண்டுகளை கடந்த பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். அதுவே வர்த்தக வாகனங்களால் என்றால், ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை உயர்த்தி விட்டால், பழைய வாகனங்களை பயன்படுத்த மக்கள் தயங்குவார்கள்.

அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எனவேதான் ஒன்றிய அரசு தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது மக்களுக்கு கவலை அளிக்க கூடிய விஷயமாகவும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாகவும் இருக்கும்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








