கோல்கட்டாவிலிருந்து லடாக் வரை... சைக்கிள்ரிக்ஷாவில் ஓர் சாகசப் பயணம்..!!
இந்தியர்கள் மட்டுமின்றி, உலக அளவில் சாகச பயண பிரியர்களின் லட்சியப் பயணங்களில் ஒன்றாக இமயமலையில் உள்ள லடாக் பகுதிக்கு செல்வதை குறிப்பிடுகின்றனர். கடும் குளிர், சவாலான சீதோஷ்ண நிலை, கரடு முரடான சாலைகள் என உலகின் மிக உயரமான வாகனச் சாலையாக கருதப்படும் லடாக் சாகச பிரியர்களை கவர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது.
சகல வசதிகளும் நிறைந்த ஆஃப்ரோடு வாகனங்கள் மற்றும் சக்திவாய்ந் இருசக்கர வாகனங்களில் செல்லும் சாகச பயண பிரியர்களே இந்த சாலையில் சென்று வந்ததை சிலாகித்தும், அச்சத்துடனும் விவரிப்பது வழக்கம். ஆனால், கோல்கட்டாவை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவர் தனது சைக்கிள் ரிக்ஷாவிலேயே லடாக்கிற்கு சாகச பயணத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
மொத்தம் 2,500 கிமீ தூரத்துக்கு சைக்கிள் ரிக்ஷாவை மிதித்து தனது கனவை நனவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். கோல்கட்டா நகரின் நக்தலா சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வரும் சத்யன் தாஸ்(40) என்பவர்தான் தனது நீண்ட கால லட்சியமாக இருந்த லடாக் பயணத்தை சைக்கிள் ரிக்ஷாவில் துவங்கி சாகச பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சொற்ப வருமானம்
கடந்த சில ஆண்டுகளாக தனது தினசரி வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்த தொகையை எடுத்துக் கொண்டு தனது பயணத்தை துவங்கிவிட்டார். மேலும், அந்த பகுதியை சேர்ந்த சாகச பயணக் குழு ஒன்று இவருக்கு நிதி உதவிகளை செய்துள்ளது. மேலும், வங்கிக் கணக்கை ஒன்றையும் திறந்து, ஏடிஎம் கார்டு ஒன்றையும் பெற்றுத் தந்துள்ளனர்.

உபகரணங்கள்
கடும் குளிருக்கு ஏற்ற வகையில் சில உடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், ரூ.15,000 செலவில் ரிக்ஷாவிற்கு புதிய இலகு எடை கொண்ட பாடி, டயர்கள், பிரேக்குகளை பொருத்தியுள்ளார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் லட்சியத்தை மட்டும் மனதில் சுமந்து கொண்டு கிளம்பிவிட்டார்.
Photos Courtesy : Wikipedia

பயண வழி
ஜார்கண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்முவை அடைய திட்டமிட்டுள்ளார். வாரணாசி, பதான்கோட், ஜலந்தர் ஆகிய வழியாக வைஷ்ணதேவி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வரை சைக்கிள் ரிக்ஷாவில் கடந்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.
Photo Credit: Flickr

உதவிகள்
சத்யன் தாஸுக்கு எழுதப்படிக்க தெரியாது. எனவே, உள்ளூர் வாசிகளின் உதவியுடன் தனது பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், தனது பயணத்துக்கு போலீசாரிடம் அனுமதி வாங்கியுள்ள சத்யன் தாஸ், உள்ளூர் எம்எல்ஏ., ஒருவரிடமும் கடிதம் ஒன்றை பெற்றுள்ளார். ஏதாவது, உதவி தேவைப்படும்போது இவற்றை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களில் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Photos Courtesy : commons.wikimedia

கின்னஸ் சாதனை
அமைதியை வலியுறுத்தும் எண்ணத்தில் புறப்பட்டிருக்கும் சத்யன் தாஸ் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மணாலி, ரோத்தங் கணவாய் வழியாக ஊர் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார். பயணம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications








