ரூ.284 கோடி பறிமுதல்! இவ்ளோ பணத்தை வெச்சுகிட்டு சென்ட் வியாபாரி என்ன ஸ்கூட்டர், காரை ஓட்டியிருக்கார் பாருங்க!
இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சென்ட் வியாபாரி ஓட்டிய ஸ்கூட்டர் மற்றும் கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயின் (Piyush Jain). இவரை பற்றிதான் இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் பேசி கொண்டுள்ளது. இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரி துறை சோதனையில் 284 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

இவ்வளவு பெரிய தொகையை இவர் எப்படி பதுக்கி வைத்திருந்தார்? என அனைவரும் பேசி கொண்டுள்ளனர். ஆனால் இவர் பயணம் செய்தது என்னவோ சாதாரண ஸ்கூட்டரும், பழைய மாடல்கள் என கருதப்படும் டொயோட்டா குவாலிஸ் மற்றும் மாருதி 800 போன்ற சாதாரண கார்களும்தான். இதுபற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் பியூஷ் ஜெயின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பியூஷ் ஜெயினின் கான்பூர் இல்லம், மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவ்வளவு பெரிய தொகை அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.

உள்ளூர் மக்கள் மற்றும் அவரது பக்கத்து வீட்டினர் தெரிவித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், உத்தர பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியில் உள்ள தனது மூதாதையரின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் தனது பழைய வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். பியூஷ் ஜெயின் மிகவும் பழமையான பஜாஜ் பிரியா ஸ்கூட்டர் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார்.

இதன் மூலம் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்துள்ளார். ஒருபோதும் அவர் மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியதே இல்லையாம். மிகவும் சாதாரணமான டொயோட்டா குவாலிஸ் மற்றும் மாருதி 800 போன்ற கார்களில்தான் அவர் அடிக்கடி தனது பயணங்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு எளிமையான வாழ்க்கை முறையின் மூலம் அவர் இவ்வளவு பெரிய தொகையை பதுக்கி வைத்திருப்பார் என்பதை யாரும் யூகித்து கூட பார்க்க முடியவில்லை. டொயோட்டா குவாலிஸ் மற்றும் மாருதி சுஸுகி 800 ஆகிய இரண்டு கார்களும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் இருந்து எப்போதும் அழிக்க முடியாத கார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால் அவை மிகவும் சாதாரண கார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு திரையுலகினரும், தொழில் அதிபர்கள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் இந்திய பணக்காரர்களின் விருப்பமான மாடல்களாக இருக்கின்றன.

இதுதவிர லம்போர்கினி, மஸராட்டி, ஃபெராரி போன்ற நிறுவனங்களின் செயல்திறன் மிக்க கார்களையும் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் வாங்கி குவிக்கின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை பதுக்கி வைத்து கொண்டு, பியூஷ் ஜெயின் மிகவும் சாதாரண ஸ்கூட்டரையும், கார்களையும் பயன்படுத்தியிருப்பது உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துகிறது. இவர் விஷயத்தில் இன்னும் தோண்ட தோண்ட பல்வேறு பூதங்கள் கிளம்பலாம்.


Click it and Unblock the Notifications








