இந்த சின்ன விஷயத்தை கூடவா மத்திய அரசு நோட் பண்ணல? இலட்சக்கணக்கில் இந்த வாகனங்கள் ரோட்டில் ஓடுது!
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதியதாக ஏதேனும் திட்டங்களை கொண்டுவந்தாலே அதனை எதிர்ப்பவர்களும், அதன் பக்க விளைவாக உருவாகும் பிரச்சனைகளும் இருக்க தான் செய்கின்றன. ஆனால், இ20 (E20) பிரச்சனை நாளுக்கு நாள் பெரியதாகிக் கொண்டே போகிறது. இ20 என்றால் என்ன? அதனால் உருவாகி உள்ள பிரச்சனைகள் என்ன? தற்போது இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு என்ன? என்பதை பற்றி எல்லாம் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கச்சா எண்ணெய் உலகில் எல்லா நாடுகளிலும் கிடைக்காததும், இதனால் குறிப்பிட்ட சில நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும் உலகின் பல நாட்டு அரசாங்கங்களுக்கு, பல விஷயங்களில் பெரிய தலைவலியாக உள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலில் மட்டுமின்றி, தேவையான எரிபொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பின் மிச்சமாகும் கசடுகளில் இருந்தும் கூட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு துளி அளவு கூட வீணடிக்கப்படாததாக கச்சா எண்ணெய் இருந்தாலும், இதற்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளதே என்பதினால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை முடிந்தவரையில் குறைக்க கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் (Electric), சிஎன்ஜி (CNG) மற்றும் ஹைட்ரஜன் (Hydrogen) எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதும் இதற்கு ஒரு காரணமே.
மற்ற வழிகளிலும் கச்சா எண்ணெய்யின் பயன்பாட்டை எவ்வாறு எல்லாம் குறைக்க முடியும் என ஆராய்ந்துவந்த மத்திய அரசுக்கு எத்தனால் (Ethonal) கண்ணில் பட்டது. அதன்படி, பெட்ரோல் உடன் எத்தனாலை கலந்து மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டது. பெட்ரோல் உடன் எத்தனாலை கலந்து பயன்படுத்துவது என்பது நீண்ட வருடங்களாக நடந்துவரும் செயல்முறையே ஆகும். ஆனால், 100% எரிபொருளில் 95% பெட்ரோலும், 5% மட்டுமே எத்தனாலும் கலந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த 5% என்கிற விகிதத்தை சில வருடங்களுக்கு முன் 10% ஆக மத்திய அரசு அதிகரித்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 20% ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது, 80% பெட்ரோலும், 20% எத்தனாலும் கலந்துதான் இ20 பெட்ரோல் என்கிற பெயரில் தற்சமயம் அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோலின் விலை கடந்த 2 வருடங்களாகவே பெரியதாக அதிகரிக்கப்படாததால், எத்தனால் 20% கலக்கப்படுவதை மக்களும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இது எப்போது பிரச்சனையாக மாறியது என்றால், 20% எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதினால் வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாக மக்கள் உணர துவங்கிய பின்பும், சமூக வலைத்தளங்களில் ஒருவரொருக்கு ஒருவர் இதுகுறித்து தங்களது கருத்துகளை பரிமாறி கொண்ட பின்பும் தான். 20% எத்தனால் கலப்பதற்கு முன்பே, இத்தகைய எரிபொருளை தாங்கும் வகையில் பெட்ரோல் வாகனங்களை அப்கிரேட் செய்யுங்கள் என ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதற்கேற்ப வாகனங்களின் என்ஜின் மற்றும் அதனை சார்ந்த பாகங்கள் அப்கிரேட் செய்யப்பட்டாலும், பெட்ரோல் வாகனங்களில் என்ஜின் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மைலேஜ் (Mileage) குறைவதாகவும் பலர் புகார்கள் கூறுவதை கேட்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் அக்சய் மல்ஹோத்ரா (Akshay Malhotra) என்கிற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்பு வழங்கப்பட்ட பெட்ரோலையும் வாங்குவதற்கு வாகன ஓட்டிகளுக்கு எந்தவொரு ஆப்ஷனையும் வழங்காமல், இ20 பெட்ரோலை வழுக்கட்டாயமாக திணிப்பதாக இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் அக்சய் மல்ஹோத்ரா, 2 வருடங்களுக்கு முன் பிஎஸ்6 (BS6)-இன்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களால் கூட இ20 பெட்ரோலை ஏற்க முடியவில்லை எனும்போது அதனை காட்டிலும் பழைய வாகனங்கள் எவ்வாறு சமாளிக்கும் என கேள்வி எழுப்பியதுடன், அவ்வாறான வாகனங்கள் இலட்சக்கணக்கில் சாலையில் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்த புகார் தான். அதாவது, இ20 பெட்ரோலுக்கு ஏற்ப புதிய பெட்ரோல் வாகனங்கள் தான் அப்கிரேட் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அப்படியென்றால், ஏற்கனவே மக்களிடம் பயன்பாட்டில் இருக்கும் பழைய பெட்ரோல் வாகனங்களின் கதி என்ன? என்கிற கேள்வியை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் எழுப்பி இருந்தோம்.
அப்கிரேட் செய்யப்படாத பழைய வாகனங்களில் இ20 பெட்ரோல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு சோதித்து பார்க்கவில்லையா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்லது, இ20 பெட்ரோல் மீது மத்திய அரசு கண் மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருக்கலாம். இதன் பின்பாவது, எல்லா பெட்ரோல் பங்க்களிலும் முன்பு வழங்கப்பட்ட 95% பெட்ரோல் மூலக்கூறுக்கள் அடங்கிய பெட்ரோலையும் மக்கள் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்து இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு முடிவுக்கட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









