மக்களுக்கு இலவசமாக பெட்ரோலை வாரி வழங்கிய பங்க் உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ரொம்ப பெருமைப்படுவீங்க!
பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் மக்களுக்கு இலவசமாக பெட்ரோலை வாரி வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே நேரத்தில், பரிசுகளும் குவிந்து வருகின்றன. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எக்ஸ்யூவி700 கார், நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ராவின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக கருதி இந்திய மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் குஜராத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் நீரஜ் சோப்ராவின் வெற்றியை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குஜராத் மாநிலம் பாருச் அருகே உள்ள நீத்ராங் நகரில் எஸ்.பி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பெயர் அயூப் பதான். இவர்தான் நீரஜ் சோப்ராவின் வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். நீரஜ் என பெயர் கொண்டவர்களுக்கு 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அயூப் பதான் அறிவித்தார்.

நேற்று (ஆகஸ்ட் 9) ஒரு நாள் மட்டும் எஸ்.பி பெட்ரோல் பங்க்கில் இந்த சலுகை வழங்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்கள் பலர் எஸ்.பி பெட்ரோல் பங்க்கிற்கு படையெடுத்தனர். தங்களுடைய பெயர் நீரஜ்தான் என்பதற்கான ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை அவர்கள் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காட்டி பலர் 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் நிரப்பி சென்றனர். நீரஜ் என்ற பெயர் உடைய 30க்கும் மேற்பட்டோர் சரியான ஆவணங்களை காட்டி, 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் நிரப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அந்த பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் அயூப் பதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

இதுகுறித்து அயூப் பதான் கூறுகையில், ''இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். இதன்படி நீரஜ் என்ற பெயர் உடையவர்களுக்கு 501 ரூபாய்க்கு பெட்ரோலை இலவசமாக வழங்குவதற்கு முடிவு எடுத்தேன்'' என்றார். இந்த சலுகையால் பலன் அடைந்த அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீரஜ் என்ற பெயர் கொண்டவரும், இந்த பெட்ரோல் பங்க்கில் இலவசமாக 501 ரூபாய்க்கு பெட்ரோல் பெற்றவருமான ஒருவர் கூறுகையில், ''உறவினர் ஒருவர் மூலமாகவே இந்த தகவல் எனக்கு தெரியவந்தது. ஆனால் ஆரம்பத்தில் இதனை புரளி என்றுதான் நான் நினைத்தேன். இருந்தாலும் எனது பெயர் நீரஜ் என்பதற்கான ஆவணங்களுடன் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்றேன்.

அங்கு என் ஆவணங்களை பரிசோதித்து பார்த்து விட்டு, 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் தந்தார்கள்'' என்றார். இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த நீரஜ் சோப்ராவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அயூப் பதான் செய்துள்ள இந்த விஷயம் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் கிடைப்பது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். இதற்கு முன்பும் பெட்ரோலை வைத்து இதேபோல் பல்வேறு ருசிகரமான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.

இதன்படி கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம், பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் கடந்த காலங்களில் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. பெட்ரோல் விலை உயரும் நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த சலுகைகளை பயன்படுத்தி கொண்டு பயனும் அடைந்துள்ளனர்.

அத்துடன் ஒரு சில சமயங்களில் திருமணம் போன்ற விழாக்களில் பெட்ரோல், டீசலை மணமக்களுக்கு பரிசாகவும் சிலர் வழங்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டலடிக்கும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவங்களும் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளன. இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் கூட, அதற்குரிய முழுமையான பலன் இந்திய மக்களுக்கு கிடைப்பதில்லை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரிகள்தான் இதற்கு காரணம். எனவே இந்தியாவில் தற்போது பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








