பெட்ரோலின் உண்மையான விலை ரொம்ப கம்மி... ஆனா மத்திய அரசு போடும் வரி எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி எவ்வளவு? என தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியில் உறைவது உறுதி.

உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வாகன மார்க்கெட்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்து விட்டது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு டூவீலரோ அல்லது காரோ இருக்கிறது. ஒரு சில வீடுகளில் இரண்டுமே இருக்கின்றன.

இதுதவிர லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களும் லட்சக்கணக்கில் இயங்கி வருகின்றன. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மிக கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, வாகனங்களே இல்லாத சாமானிய மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், பால், காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூடவே உயர்ந்து விடும். இதுதவிர பஸ் கட்டண உயர்விற்கும் இது ஒரு காரணமாக அமையலாம். தற்போது அப்படி ஒரு சூழலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. ஆம், இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

82 நாட்கள் இடைவெளிக்கு பின்னர், இந்தியாவில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் எரிபொருள் விலை தினமும் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தொடர்ந்து 19வது நாளாக இன்றும் (ஜூன் 25ம் தேதி) எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 79.92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் அங்கு ஒரு லிட்டர் டீசல் 80.02 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்றொரு சோகமான விஷயம் என்னவென்றால், டெல்லியில் பெட்ரோலின் விலையை, டீசல் விலை தற்போது ஓவர்டேக் செய்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவின் போக்குவரத்து துறை டீசலையே பிரதான எரிபொருளாக பயன்படுத்தும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு இது வழிவகுக்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஊரடங்கு காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரியே மிகவும் முக்கியமான காரணம். பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு எரிபொருட்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரி எவ்வளவு? என்பது தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

டெல்லியில் கடந்த மே 6ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 71.26 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 69.39 ரூபாய்க்கும் விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 18.28 ரூபாய் மட்டும்தான்! அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலையோ 18.78 ரூபாய் மட்டுமே! ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த அடிப்படை விலையுடன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை சேரும்போது, விலை பல மடங்கு அதிகரித்து விடுகிறது. பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் எவ்வளவு? டீலர் கமிஷன் எவ்வளவு? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் வழங்கியுள்ளோம்.

பெட்ரோல்
அடிப்படை விலை - 18.28 ரூபாய்
மத்திய அரசின் கலால் வரி - 32.98 ரூபாய்
மாநில அரசின் வாட் வரி - 16.44 ரூபாய்
டீலர் கமிஷன் - 3.56 ரூபாய்
ஆக மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகை - 71.26 ரூபாய்.

டீசல்
அடிப்படை விலை - 18.78 ரூபாய்
மத்திய அரசின் கலால் வரி - 31.83 ரூபாய்
மாநில அரசின் வாட் வரி - 16.26 ரூபாய்
டீலர் கமிஷன் - 2.52 ரூபாய்
ஆக மொத்தம் ஒரு லிட்டர் டீசலுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகை - 69.39 ரூபாய்.

கடந்த மே 6ம் தேதியன்று டெல்லியின் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அடிப்படையாக வைத்து இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று வாட் வரி என்பது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். எனவே இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








