அதிரடியாக குறையப்போகும் பெட்ரோல், டீசல் விலை! அடுத்து நடக்கப்போவது இது தான்!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் இன் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை புத்தாண்டு அல்லது பொங்கல் பரிசாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியா முழுவதும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக தற்போது கட்சிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மத்திய அரசும் கடைசி நேரத்தில் மக்கள் மத்தியில் எந்தவித கெட்ட பெயரும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை என்பது ஒரு அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ரூ100 என்ற விதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. நீண்ட நாட்களாக பெட்ரோல் விலை மாறாமல் இருந்து வருகிறது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை பெரும்பாலும் மாறாமல் இருக்கிறது.
தற்போது சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை அமெரிக்க டாலருக்கு 77.63 டாலராக இருக்கும் என தெரிகிறது. இதனால் இந்தியாவில் அடுத்தடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கையால் பெட்ரோல் டீசல் விலை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ110 வரை சென்றது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான வரி சலுகைகளை அறிவித்து பெட்ரோல் விலையை குறைத்தன. இந்நிலையில் மீண்டும் மக்களுக்கு பெட்ரோல் விலை குறைப்பை பரிசாக வழங்க முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி மத்திய அரசு பெட்ரோலுக்கு மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூபாய் 8ம் டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூபாய் 6ம் குறைக்க முடிவு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதே போல தான் கடந்த முறையும் பெட்ரோல் டீசல் விலை ஏறும்போது கலால் வரிகள் குறைக்கப்பட்டன. தற்போது தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது அதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது போல சர்வதேச மார்க்கெட்டிலும் கச்சா எண்ணையின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சொல்லப்போனால் குறைந்து கொண்டே தான் சென்று செல்கிறது. சரியாக கணக்கிட்டால் பெட்ரோல் விலையில் ரூபாய் 10 கூட குறைய வாய்ப்பிருக்கிறது. தற்போது ரூபாய் 100க்கு மேல் விற்பனையாகி வரும் பெட்ரோல் விலை ரூ.90 என்ற விலையில் கூட விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
தற்போது சென்னையில் ரூ102.63 என்ற விலையில் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. அதேநேரம் டீசல் விலையை பொறுத்தவரை ரூ 94.24 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. நீண்ட ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை இதே நிலையில்தான் நீடித்து வருகிறது. முன்பெல்லாம் செய்திகளில் தினந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் என்ற செய்தி நமக்கு கிடைக்கப்பெறும். ஆனால் சமீப நாட்களாக இப்படியான செய்திகள் எதுவும் இல்லை.
பெட்ரோல் டீசல் விலையை மிக அதிகமாக உயர்த்தாமல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது. இதே நேரம் பெட்ரோல் தேவையை குறைப்பதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. தற்போது பத்து சதவீதம் பெட்ரோலில் எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. இதை 20 சதவீதமாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அந்த பெட்ரோலுக்கான வாகனத்தை தயாரித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. அதை வைத்து தான் அனைத்து பொருட்களின் விலையும் முடிவு செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் இல்லை என்றால் இந்தியாவே ஸ்தம்பித்து போய்விடும். அனைத்துக்கும் மூல ஆதாரமாக பெட்ரோல், டீசல் இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவது என்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









