பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. இந்தியாவில் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை, அதாவது மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படும். ஆனால் இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இன்று காலை (ஆகஸ்ட் 20) வழக்கம் போல் கண் விழித்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆம், அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (Value Added Tax - VAT) உத்தரபிரதேச மாநில அரசு உயர்த்தியதே இதற்கு காரணம்.

அதாவது உத்தரபிரதேச மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 26.80 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 17.48 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2.35 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 92 பைசாவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளுடன் சேர்த்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறைவான விலையில் கிடைப்பதால், டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில நகரங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கு சென்று எரிபொருள் நிரப்பி கொள்வதாகவும், இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வாட் வரியை குறைக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில்தான் வாட் வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விலை உயர்விற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும். ஆனால் வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.


Click it and Unblock the Notifications








