ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து தலைமை செயலகம் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி... ஏன் தெரியுமா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மம்தா பானர்ஜி வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, மேற்கு வங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி நூதன போராட்டம் ஒன்றை இன்று (பிப்ரவரி 25) நடத்தியுள்ளார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் அவர் பின்னால் அமர்ந்து தலைமை செயலகத்திற்கு வந்தார். மாநில அமைச்சரான ஃபிர்ஹாட் ஹக்கீம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட, முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி பின்னால் அமர்ந்து வந்தார்.

ஹஸ்ரா மோர் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தார். அப்போது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து அவர் கையசைத்து கொண்டே வந்தார். அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையையும் அவர் அணிந்திருந்தார்.

தலைமை செயலகம் சென்றடைந்த பின் மம்தா பானர்ஜி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசை அவர் கடுமையாக தாக்கி பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாம் போராடி கொண்டுள்ளோம். மோடி அரசு பொய் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வருகிறது.

எரிபொருள் விலையை குறைப்பதற்கு அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தபோது இருந்த பெட்ரோல் விலையுடன் தற்போதையை விலையை ஒப்பிட்டு நீங்கள் வித்தியாசத்தை பார்க்கலாம். மோடியும், அமித்ஷாவும் நாட்டை விற்பனை செய்து கொண்டுள்ளனர். இது மக்களுக்கு எதிரான அரசு'' என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்போது வாகன ஓட்டிகளை மிக கடுமையாக பாதித்து வருகிறது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை எப்போது குறையும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட சில மாநிலங்களில் வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படலாம். இந்த தேர்தலை மனதில் வைத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த காலங்களில் தேர்தல்கள் நடைபெற்றபோது இதுபோன்ற நடவடிக்கையை நாம் பலமுறை பார்த்துள்ளோம். எனவே தேர்தல் நேரத்தில் விலை குறைவதற்கோ அல்லது குறைந்தபட்சம் மேலும் உயராமல் இருப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில் பிரீமியம் பெட்ரோலின் விலை ஏற்கனவே 100 ரூபாயை கடந்து விட்டது.

எனவே எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தாங்கள் விதித்து வரும் கலால் வரி, வாட் வரி ஆகியவற்றை குறைத்து கொள்வதன் மூலமோ அல்லது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலமோ விலை குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








