பெட்ரோல், டீசல் விலை உயர்வை கூட பொறுத்துக்கலாம் போல... இந்த பிஜேபிகாரங்க பேசறது சகிக்கல... அமைச்சரால் சர்ச்சை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு முந்தைய அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்காததுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணம் என சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த சூழலில் பீஹார் மாநில அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நாராயண் பிரசாத் கூறியுள்ள கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சாமானிய மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என நாராயண் பிரசாத் பேசியுள்ளார்.

சாமானிய மக்கள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்துகளைதான் பயன்படுத்துகின்றனர் என பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது நாராயண் பிரசாத் கூறினார். மேலும் ஒரு சிலர் மட்டுமே போக்குவரத்திற்கு தனியாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மக்கள் பழக்கப்படுத்தி கொள்வார்கள் என்கிற ரீதியிலும் நாராயண் பிரசாத் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய பேச்சுக்கள் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

ஏனெனில் சாமானிய மக்களின் வீடுகளிலும் தற்போது இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்திற்கு அத்தியாவசிய தேவை இருப்பதால், சிரமப்பட்டாவது ஒரு டூவீலரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வரும் சூழலில், அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சரி, பாஜக அமைச்சர் கூற்றுப்படி சாமானிய மக்களிடம் சொந்தமாக வாகனங்களே இல்லை எனவும், அவர்கள் முழுக்க முழுக்க பொது போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர் எனவும் வைத்து கொள்வோம். அப்படி ஒரு வறுமையில் வாழும் மக்களை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாதிக்காதா? எனவும் நெட்டிசன்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு, எரிபொருள் விலை உயர்வுதான் அடிப்படை காரணம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எரிபொருள் விலை உயர்வால், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் உயர தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

சொந்தமாக வாகனம் கூட இல்லாமல், பொது போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள சாமானிய மக்களை இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாதிக்கும் என்பது அமைச்சருக்கு தெரியவில்லையா? எனவும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான கலால் வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகளை விதித்து வருகின்றன. பெட்ரோல், டீசலின் விலை சிகரத்தில் இருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் அல்லது அவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க மாநில அரசுகள் விரும்பாது என்பதால், இந்த கோரிக்கை நிறைவேறுவது சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications








