பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...
பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகளுக்கும் இது பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப்ரவரி 26) கூறியுள்ளார். குளிர்காலம் முடிவதால் இனி பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மக்களின் கவலைகளை சற்றே போக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேலும் கூறுகையில், ''சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது நுகர்வோர்களையும் பாதித்துள்ளது. ஆனால் குளிர்காலம் முடிவடைவதால், விலை சற்று குறையும். இது சர்வதேச விவகாரம். தேவை அதிகரித்துள்ளதால், விலையும் அதிகமாக உள்ளது.

இது குளிர்காலத்தில் நடக்க கூடிய விஷயம்தான். குளிர்காலம் முடிவடைவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும்'' என்றார். பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதால், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதியடைந்துள்ளனர். விலை எவ்வளவு குறையும்? என அவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுதவிர தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வெகு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவி வருகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின்போது எண்ணெய் நிறுவனங்கள் இந்த யுக்தியை கையாண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் நாட்களில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதேபோல் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த உடனேயே மீண்டும் விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் நிறைய இருக்கின்றன என்பதையும் வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து தலைவலியை கொடுத்து கொண்டிருப்பதால், இந்தியாவில் தற்போது நல்ல மைலேஜ் தரக்கூடிய கம்யூட்டர் பைக்குகளின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது தொடர்பாகவும் வாகன ஓட்டிகள் ஏராளமானோர் பரிசீலிக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








