தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை இந்த அளவிற்கு உயர்வது இதுவே முதல் முறை! எவ்ளோனு தெரிஞ்சா வண்டி ஓட்ற ஆசையே போயிரும்
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை அவர்களுக்கு தற்போது மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை புதிய உச்சங்களை தொட்டு வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி வந்தது.

இந்த சூழலில் தமிழ்நாட்டிலும் தற்போது முதல் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நேற்று (ஜூன் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 4 பைசா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தற்போதுதான் பெட்ரோல் விலை முதல் முறையாக 100 ரூபாயை கடந்துள்ளது. அதே நேரத்தில் கொடைக்கானலில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 92 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது, வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது இல்லத்தரசிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் எரிபொருள் விலை உயர்ந்தால், மளிகை மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடும். ஏற்கனவே கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையிழப்பு, வருவாய் இழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்து கொண்டுள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசுகளுக்கு அத்தகைய திட்டம் உள்ளதா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

ஆனால் பத்து ஆண்டுகளுக்கு பின் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பிரச்னையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்டு வருகிறது. எனவே அரசுக்கு தற்போது கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் என்பதால், வரும் காலங்களில் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் என நம்பலாம்.

மறுபக்கம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து, விலையை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் மிகப்பெரிய தொகையை இழக்க வேண்டியிருக்கும் என்பதால், பெரும்பாலான மாநில அரசுகள் இதற்கு தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து பாடாய்படுத்தி வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








