போட்றா வெடிய... யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸை கொடுத்த மோடி அரசு... மக்கள் உற்சாக கொண்டாட்டம்!
யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்த நிலையில், டீசல் விலையும் சதம் அடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெட்ரோல், டீசலின் வரலாறு காணாத விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படியான வரிகள் ஆகியவையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன் பேரில் தமிழ் நாடு அரசு சமீபத்தில் பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாயை குறைத்தது. இதன் காரணமாக தமிழ் நாட்டை சேர்ந்த வாகன ஓட்டிகளின் சுமை ஓரளவிற்கு குறைந்தது. எனினும் ஒன்றிய அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிப்பது தொடர்பாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாஜகவை சேர்ந்த ஒரு சிலர் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சைதான் ஏற்பட்டது. எனவே வேறு வழியில்லாமல் தொடர்ந்து மிக அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று (நவம்பர் 3) அதிரடியான அறிவிப்பு ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது ஓரளவிற்கு நிம்மதியடைந்துள்ளனர்.

ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாய் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நடவடிக்கை நாளை (நவம்பர் 4) முதல் அமலுக்கு வருகிறது. எனவே நாளை முதல் வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு குறைவான விலையில் பெட்ரோல், டீசலை வாங்க முடியும்.

இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் இந்த நடவடிக்கை, பொருளாதார செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி, சேவைகள் மற்றும் விவசாயம் என அனைத்து துறைகளிலும் பொருளாதார செயல்பாடுகள் உத்வேகம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக வாகன ஓட்டிகள்தான் இந்த நடவடிக்கையால் ஓரளவிற்கு திருப்தியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு வரிகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் வரிகளை குறைக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலை வாகன ஓட்டிகள் இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

ஆனால் மாநில அரசுகள் வரிகளை குறைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வருவாயை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனவே பெட்ரோல், டீசல் தற்போதைக்கு ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் தற்போதைய விலை குறைப்பு நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு நிவாரணமாக இருக்கும். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது இன்னும் ஒரு சில மாதங்களில், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இதை முன்னிட்டு மேலும் விலை குறைக்கப்படுவதற்கோ அல்லது குறைந்தபட்சம் விலை உயர்த்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








