ரூ. 100ஐ தாண்டியது பெட்ரோல் விலை... எந்தெந்த மாநிலத்தில் தெரியுமா?.. இதோ பட்டியல்...
இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை ரூ. 100 தாண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாநிலங்கள்குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஐந்து மாநில தேர்தல் முடிவை அடுத்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் விண்ணைத் தொட ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், இன்றும் அவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டன. இதுபோன்று விலை உயர்த்துவது கடந்த ஒரு மாதத்தில் இது 18வது முறையாகும். இந்த புதிய விலையுயர்வால் நாட்டின் ஆறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 தொட்டுள்ளது. சில மாநிலங்களில் ரூ. 100ஐ கடந்தும் இருக்கின்றது.

பெட்ரோல் விலையில் 27 பைசாவும், டீசல் விலையில் 28 பைசாவும் இன்று உயர்த்தப்பட்டது. இதனால், நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் லே ஆகிய மாநிலங்களில் நூறு ரூபாயை பெட்ரோல் விலை தொட்டுள்ளது.

ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 100க்கு பெட்ரோல் விற்கப்படுகின்றது. விசாகப்பட்டினத்தில் மட்டும் ரூ. 99.75க்கு பெட்ரோல் விற்கப்படுகின்றது. தெங்கானா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் ரூ. 100.57க்கும், குறிப்பிட்ட சில இடங்களில் ரூ. 100.17க்கும் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

லே பகுதியில் ரூ. 100.43 என பெட்ரோல் லிட்டர் ஒன்று விற்பனைக்குக் கிடைக்கின்றது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 94.76க்கும், டீசல் லிட்டர் ரூ. 85.66க்கும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. உள்ளூர் வரி, வேட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் ஆகியவற்றால் இதுபோன்று மாநிலத்திற்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபட்டு காணப்படுகின்றது.

தமிழகத்தில் அரியலூரில் அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டர் ரூ. 97க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 96.23க்கும், டீசல் ரூ. 90.38க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது.

பிற மாநிலங்களைக் காட்டிலும் எரிபொருளுக்கு அதிக வாட் வரி வசூலிக்கப்படுவதன் காரணத்தினாலேயே இந்த மாநில மக்கள் அதிக விலைக் கொடுத்து எரிபொருளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக வேட் வரி வசூலிக்கப்படுகின்றது.

அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக தென்படுவதால் பெட்ரோல், டீசல் விநியோகம் மிகக் கடுமையாக குறைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், தொடர்ச்சியாக இந்தியாவின் அவற்றின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமுகத்தில் தென்படுகின்றன.


Click it and Unblock the Notifications








