தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல், டீசல்! எவ்வளவு தள்ளுபடி என தெரியுமா?
தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் 17வது மக்களவை பொது தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் (1) உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் மே 23ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 90 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். எனவே இது உலகின் மிகப்பெரிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஆனால் 90 கோடி வாக்காளர்களும் தங்கள் வாக்கை பதிவு செய்வார்களா? என்பது சந்தேகமே. இருந்தபோதும் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இமாலய இலக்கை எட்ட தேர்தல் ஆணையம் விடாமுயற்சியுடன் போராடி வருகிறது.

இதற்காக வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் தங்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் கண்டிப்பாக வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையமும் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த சூழலில் அனைத்திந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு (All India Petroleum Dealers Association - AIPDA), அதிரடியான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி தங்கள் வாக்கை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு எரிபொருள் விலையில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. தேர்தல் நாளான்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

இதற்கு வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை ஆதாரமாக கொள்ளப்படும். தேர்தல் நாளான்று உங்கள் விரலில் அடையாள மை இருந்தால் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி என்ற சலுகை விலையில் நீங்கள் எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். ஆனால் தேர்தல் நாளான்று ஒருவர் அதிகபட்சமாக 20 லிட்டர் எரிபொருளுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற முடியும் என அனைத்திந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அஜய் பன்சால் தெரிவித்துள்ளார்.

இந்த தள்ளுபடியின் காரணமாக ஏற்படும் பொருளாதார சுமையை டீலர்கள்தான் சுமக்க உள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் அல்ல எனவும் அஜய் பன்சால் கூறியுள்ளார். வாக்குப்பதிவை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 64,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அனைத்திந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 90 சதவீத டீலர்கள் அதாவது சுமார் 58,000 டீலர்கள் இந்த சலுகையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த சலுகையை எதிர்பார்க்க முடியாது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








