பெட்ரோல் பங்க்களில் இந்த வேலை ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு! மத்திய அரசு கூலா சொன்ன பதில்!
இந்தியாவின் பெரிய செலவினங்களுள் ஒன்றாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது ஆகும். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பளவில் கச்சா எண்ணெய் ஆனது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும், அமெரிக்க நாடுகளில் இருந்தும் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்யை வைத்து பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, முக்கியமான பொருட்களை எல்லாம் தயாரித்த பின்னர் மீரும் கச்சா எண்ணெய் கசடுகளில் இருந்தும் கூட பல விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் பயன்படுத்தி விடுகிறோம் என்றாலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.

ஏனெனில், இதன் மூலமாக பணம் மிச்சமாகுவது மட்டுமின்றி, கச்சா எண்ணெய்யை வழங்கும் நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவையும் விலகும் என்பதுதான் கச்சா எண்ணெய் விஷயத்தில் கடந்த பல வருடங்களாகவே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதற்காக கச்சா எண்ணெய் பயன்பாட்டை எப்படி எல்லாம் குறைக்கலாம் என யோசித்துவரும் மத்திய அரசு, அதன் ஒரு பகுதியாகவே எலக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக ஊக்கப்படுத்தி வருகிறது.
அதேநேரம், நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் எத்தனால் (Ethanol)-ஐ கலந்து பயன்படுத்தவும் மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில், 90% பெட்ரோல் உடன் 10% எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த 2025ஆம் ஆண்டில் இருந்து 20% எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, இப்போது நீங்கள் பெட்ரோல் பங்குகளில் வாங்கும் பெட்ரோலில் 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கலந்துதான் விநியோகிக்கப் படுகிறது.

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலைகளில் பெரியதாக அதிகரிப்பு இல்லாததற்கும் இதுதான் காரணம். 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்படுத்தும் அளவிற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களை அதற்கேற்ப அப்டேட் செய்து அறிமுகம் செய்து வருகின்றன. இவ்வாறு எல்லாமே திட்டமிட்டப்படி நல்லப்படியாக தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் சமீப நாட்களாக நாடு தழுவிய அளவில் பெட்ரோல் வாகனங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு காரணம் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் தான் என்றும், இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த எக்ஸ் பதிவில், 20% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் ஆனது வாகனத்தில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறியுள்ள மத்திய அரசு, இவ்வாறான எரிபொருளை பயன்படுத்துவதால் வாகனத்தின் இன்ஸ்சூரன்ஸ் (Insurance) பாதிக்கப்பட கூடும் என உலாவும் வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. பயண அனுபவம் மேம்படுவதுடன், முக்கியமாக கார்பன் மாசு உமிழ்வு சுமார் 30% குறைவாக பதிவாகுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்த எக்ஸ் பதிவில், நகர்புற பயன்பாட்டிற்கு 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மிகவும் அவசியமானது என கூறியுள்ள மத்திய பெட்ரோலிய & இயற்கை எரிவாயு துறை அமைச்சகம், இதனால் வாகனங்கள் பழுதுகளை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், வேண்டுமாயின் பழைய வாகனங்களில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றும், அப்போதும் கூட 20% எத்தனாலால் ஏற்படும் பழுதுகளை குறைந்த செலவில் வழக்கமான சர்வீஸ்கள் மூலமாக சரிச்செய்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்கும் அளவிற்கான நிலைமையை 2030ஆம் ஆண்டிற்குள் எட்டிவிட வேண்டும் என ஆரம்பத்தில் மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், இந்த இலக்கை 2025ஆம் ஆண்டிலேயே எட்டியுள்ளனர். இதனால் அடுத்ததாக பெட்ரோலில் 30% எத்தனாலை கலந்து மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுத்து செல்லும்போது சிறு சிறு இடையூறுகள் வர தான் செய்யும். அவற்றை எவ்வாறு மாற்று வழியில் சரி செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டுமே தவிர்த்து, திட்டத்தை கைவிடும் முடிவிற்கு வர கூடாது.


Click it and Unblock the Notifications









