மத அடையாளங்களை வாகனங்களில் பயன்படுத்த தடை... திடீர் பரபரப்புக்கு காரணம் என்ன..?
கார் டேஷ்போர்டுகளில் மத சார்பான அடையாளங்களை பயன்படுத்த பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.
கார்களின் டேஷ்போர்டில் சிறிய அளவிலான கடவுள் சிலைகளை வைத்திருப்பதும், உள்பக்க ரியர் வியூ கண்ணாடியில், மத அடையாளங்களை தொங்கவிட்டிருப்பதும், நாம் அனேக வாகனங்களில் பார்க்கக்கூடிய ஒன்றாகும். இந்த விஷயத்தில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், அல்லது பிற மதத்தவர் என்ற பாகுபாடு இருப்பதில்லை.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலைகளில் ஏற்படும் கவனச் சிதறல்களை காரணமாகக் காட்டி மத அடையாளங்களை கார்களில் பயன்படுத்த திடீரென தடை விதித்துள்ளனர்.

எதற்காக இந்த தடை?
கார் டேஷ்போர்டில் மத அடையாளங்களை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஐலீன் லிசாடா கூறுகையில், புதிய சட்டத்தின் அடிப்படையில் வாகனங்களில் மத அடையாளங்களை பயன்படுத்துவது, வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன்களில் பேசுவது, மெசேஜ் செய்வது, சாப்பிடுவது, மேக் அப் செய்வது, மது/தண்ணீர் குடிப்பது போன்றவை தடை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மற்ற கெடுபிடிகளை காட்டிலும் மத அடையாளங்களை கார்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதே பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடம் அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 கோடி பேர் ஜனத்தொகை கொண்ட பிலிப்பைஸ் நாட்டில் 80% பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் மத அடையாளங்கள் வாகனங்களில் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும்பாலான வாகனங்களில் கடவுள் சிலைகளோ அல்லது தொங்கவிடப்பட்டிருக்கும் மத அடையாளங்களையோ காண முடியும். கார்களில் இவற்றை பயன்படுத்தும் போது கடவுளில் ஆசீர்வாதத்துடன் பாதுகாப்பாக உணர்வதாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

இந்நிலையில் அரசின் இந்த திடீர் முடிவு அங்கு பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் அரசின் இந்த தடை நடவடிக்கை வரும் மே 26 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத அடையாளங்களை வாகனங்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட அரசின் இந்த தடையை கத்தோலிக்க பிஷப் சங்கத்தின் நிர்வாக செயலாளர் அருட்தந்தை ஜெரோம் செஸிலானோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தேவையற்ற ஒரு செயல் என்றும், மடத்தனமான வீண் நடவடிக்கை என்றும் கூறியுள்ள அவர், மத அடையாளங்களை கார்களில் பயன்படுத்துவதால், ஆபத்து நிறைந்த பயணங்களின் போது ஓட்டுநர்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், கடவுள் அவர்களுக்கு துணை புரிவதாகவும் அவர்கள் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

இது மட்டுமல்லாது அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓட்டுநர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது மத அடையாளங்களால் விபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு புள்ளிவிவரத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஓட்டுநர்களிம் நம்பிக்கையை அரசு தலையிடத்தேவையில்லை என்றும் அவர்கள் காட்டமாக தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








