அவசர அவசரமாக பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்!! எதுக்குனு தெரிஞ்சா சிரிப்பு தான் வரும்
ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காக கனடாவில் ஹெலிகாப்டர் பைலட் செய்த செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் அப்படி என்ன செய்தார் என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

திருமணம் எல்லாம் முடிந்து எத்தனை வயதானாலும், சிலருக்கு இன்னமும் குழந்தை குணம் மாறாமல் இருக்கும். இதனால் அத்தகையவர்கள் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றன.

அதற்கு ஒரு உதாரணமாகவே இந்த நிகழ்வை பார்க்கின்றோம். கனடா, உலகின் மிக பெரிய நாடுகளுள் ஒன்று. ஆனால் இதற்கு ஏற்ப இந்த நாட்டில் மக்கள் தொகை இல்லாததால், மக்கள் அடர்த்தி குறைவுதான். இருப்பினும் அந்நாட்டு மக்கள் குற்ற சம்பவங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை.

நாம் பார்க்க போகும் இந்த நிகழ்விலும், பொதுமக்களில் ஒருவரால் எடுக்கப்பட்டு, இணையத்தில் வைரலான படத்தினால் தான் இந்த பைலட், போலீஸாரிடம் சிக்கி கொண்டுள்ளார். கனடாவில் உள்ள நகரங்களுள் ஒன்று டிஸ்டேல். சுமார் 3,000 பேர் இந்த நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நகரின் மையப்பகுதி ஒன்றில் கடந்த ஜூலை மாத 31ஆம் தேதி சிவப்பு நிற ஹெலிகாப்டர் ஒன்று எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதால் சிலருக்கு பயம் தொற்றி கொண்டது. ஆனால் ஒரு சிலரோ உஷாராக நடப்பதை தங்களது மொபைல் போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். கனடாவில் இந்த குறிப்பிட்ட மாகாணத்தில் மருத்துவ விமான ஆம்புலன்ஸ்களில் இவ்வாறான சிவப்பு நிறம் தான் கொடுக்கப்படுகின்றன.

இதனால் ஒருவேளை அவசர மருத்துவ உதவிக்காக இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என அங்கிருந்தவர்கள் நினைத்து கொண்டனர். இருப்பினும் ஹெலிகாப்டரினால் தூசி, புழுதிகள் கிளம்பியதாலும், அருகில் பள்ளிக்கூடம் இருந்ததாலும் அப்பகுதி மக்கள் சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் பரபரப்பான போலீஸார் உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, ஏதேனும் மருத்துவ சேவைக்காக ஹெலிகாப்டர் டிஸ்டெல் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என விசாரிக்க துவங்கினர். ஆனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இல்லை என்பது போல் பதில் வரவே, போலீஸாருக்கு சந்தேகம் கிளம்பியது.

உடனே தங்களது வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாருக்கு, அங்கு சென்ற பிறகே என்ன நடந்தது என்ற முழு விபரமும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஹெலிகாப்டரை இயக்கிய 34 வயதான பைலட், ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்பியதால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தரையிறக்கியுள்ளார் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பைலட் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். பைலட்டிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் உள்ளது. இருப்பினும் பார்க்கிங் இல்லாத இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி உள்ளார்.

அவசர தேவையாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது ஒன்றும் அவ்வளவு அவசர தேவை இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்றப்படி பைல்ட் பற்றிய விபரங்கள் எதையும் தற்போது வரையில் போலீஸார் வெளியிடவில்லை.

அதேபோல் இது எந்த மாதிரியான ஹெலிகாப்டர்? தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரா அல்லது மக்கள் நினைத்தாற் போன்று அவசர கால மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டரா? என்பதும் தெரியவில்லை. பைலட்டை பற்றிய விபரங்களை போலீஸார் வெளியிடாமல் இரகசியமாக பாதுகாப்பதால், இது அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டராகவே இருக்கும்.

பள்ளிக்கூட மைதானத்தில் அபாயகரமான முறையில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஐஸ்க்ரீம் சாப்பிட சென்ற பைலட் மருத்தவ சேவை குழுவில் பணியாற்றுபவராகவே இருப்பார் என பொதுமக்கள் பேசி கொள்கின்றனர். ஆக மொத்தத்தில் ஐஸ்க்ரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கி மொத்தம் நகர மக்களையும் கதிகலங்க வைத்துவிட்டார் இந்த பைலட்.
Note: Images are representative purpose only(except red color helicopter images)


Click it and Unblock the Notifications








